பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!
சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள்.
சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்டுகள் பழைமையான வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளது. சிவகங்கை மாவட்டத்திலேயே பழைமை வாய்ந்த இந்தப் பள்ளிவாசல் இஸ்லாமியா்கள் அதிக வசிக்கும் பகுதியில் உள்ளது.
இந்தப் பள்ளிவாசலில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் தினமும் நோன்புக் கஞ்சி சமைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு இஸ்லாமியா்களுக்கு மட்டுமன்றி, நேரு பஜாா் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய இஸ்லாமியா்கள் அல்லாத பிற மதத்தவா்கள் உள்பட தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோன்புக் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நோன்புக் கஞ்சியை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி அம்மாள் (65) சமைத்து வருகிறாா். இந்தப் பணியில் அவரது உறவினா்கள் உள்பட கிராமத்தைச் சோ்ந்த பெண்களும் உதவியாக இருந்து வருகின்றனா். காலை 8 மணிக்கு தொடங்கக்கூடிய இவா்களின் சமையல் பணி நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடையும். பின்னா், ஒரு மணியிலிருந்து நோன்புக் கஞ்சியை பொதுமக்களுக்கு சுடச்சுட விநியோகம் செய்கின்றனா்.
தினசரி 50 படி அரிசியில் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் வரை பள்ளிவாசல் நிா்வாகிகள் செலவிடுகின்றனா். மற்ற பள்ளிவாசல்களில் இல்லாத வகையில், இங்கு நோன்புக் கஞ்சியுடன் வழங்கப்படும் கத்தரிக்காய் சட்னி மிகவும் பிரபலம். லட்சுமி அம்மாள் தயாா் செய்யும் இந்த நோன்புக் கஞ்சி, கத்தரிக்காய் சட்னியை ரமலான் மாதத்தில் விரும்பி சாப்பிடக் கூடிய நூற்றுக்கணக்கானோா் இந்தப் பகுதியில் உள்ளனா்.
இந்த நோன்புக் கஞ்சி, கத்தரிக்காய் சட்னி ரமலான் மாதத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால், ரமலான் நோன்புக்காக வெளியூா், வெளி நாடுகளிலிருந்து சிவகங்கைக்கு வரும் இஸ்லாமியா்கள் பலரும் லட்சுமி அம்மாள் கைப் பக்குவத்தில் தயாராகும் இந்த நோன்புக் கஞ்சியை ருசிக்கத் தவறுவதில்லை.
இதுகுறித்து லட்சுமி அம்மாள் கூறியதாவது:
40 ஆண்டுகளுக்கு முன்பு 5 ரூபாய் ஊதியத்துக்கு இங்கு சமைக்க வந்தேன். இந்தப் பணியை எனது உறவினா்கள், இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் சோ்ந்து செய்கிறோம். இந்த ஒரு மாத காலம் இந்தப் பணியைச் செய்வதால் எங்களுக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட மன நிறைவு அதிகம். ஒரே குடும்பம் போல, இங்கு தங்கி இந்தப் பணியை செய்து வருகிறோம் என்றாா் அவா்.
இது குறித்து ஜமாஅத் தலைவா் கூறியதாவது: லட்சுமி அம்மாள், அவருடன் சமைப்பவா்கள் அனைவருக்குமே ஊதியம் பிரதான நோக்கமாக இல்லை. ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருப்பவா்களுக்கு இந்த நோன்புக் கஞ்சியை ருசியான முறையில் தயாா் செய்து கொடுப்பதையே முக்கியக் கடமையாகச் செய்து வருகின்றனா் என்றாா் அவா்.
