பிளக்ஸ் பேனர் வேண்டாம்..! விஜய் பிரசார பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
சென்னை: பைக் டாக்ஸி ஓட்டும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கல்லூரி மாணவன் கைதான பின்னணி என்ன?
சென்னை, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், குடும்பச் சூழல் காரணமாக பைக் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம், கோயம்பேடு முதல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை செல்ல முன்பதிவு ஒன்று வந்திருக்கிறது. உடனடியாக பைக் டாக்ஸி ஓட்டும் பெண், முன்பதிவு செய்த வாடிக்கையாளரை போனில் அழைத்திருக்கிறார்.
அப்போது எதிர்முனையில் பேசிய ஆண், தன்னுடைய அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண், முன்பதிவு செய்த லோக்கேஷனுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இளைஞர் ஒருவர் காத்திருந்தார். அவரிடம் உங்கள் அம்மா வரவில்லையா என்று பெண் டிரைவர் கேட்டிருக்கிறார்.

அப்போது அந்த இளைஞர், நான்தான் முன்பதிவு செய்தேன். எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது. அதனால் என்னை கல்லூரிக்கு பைக்கில் அழைத்துச் செல்ல முடியுமா என அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அதனால், அந்தப் பெண்ணும் இளைஞரை பைக்கில் ஏற்றிக் கொண்டு கல்லூரிக்குச் சென்றிருக்கிறார்.
அரும்பாக்கம் பகுதியில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டு வந்த இளைஞர், திடீரென பைக்கை ஓட்டிய பெண்ணுக்குப் பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் டிரைவர், பைக்கை நிறுத்தி விட்டு ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என இளைஞரிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த இளைஞர், நான் என்ன செய்தேன் என அந்தப் பெண் டிரைவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். நடுரோட்டில் இவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தைச் சிலர் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பெண் டிரைவர், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப்பிறகு அமைந்தகரையைச் சேர்ந்த இம்ரான் (19) என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இம்ரான், ராயப்பேட்டை பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.