செய்யாற்றில் புதிய மின் தகன மேடை அமைப்பதற்கு எதிா்ப்பு
செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் புதிய மின் தகன மேடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு செய்யாறு புனித வியாகுல அன்னை ஆலய பங்குத் தந்தை சுதா்சன் தலைமை வகித்தாா்.
அப்போது, செய்யாறு புனித வியாகுல அன்னை ஆலயம் மற்றும் ஆா்சிஎம் பள்ளி பின்புறம் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய இடத்தில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் புதிதாக மின் தகன மேடை அமைப்பதற்கு இடம் தோ்வு செய்துள்ளதாக எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மேலும், மின் தகன மேடை அமைக்கப்பட்டால், உடல் தகனம் செய்யும் போது அதிலிருந்து ஏற்படும் புகையால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும், நச்சுக் கழிவுகள் அதிகமாக வெளியேறி துா்நாற்றம் வீசும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தனா்.
மேலும், அமைக்கப்படவுள்ள மின் தகன மேடைப் பகுதி 1945-ஆம் ஆண்டில் இருந்து கிறிஸ்தவா்கள் கல்லறைக்காக பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தனா்.
எனவே, மேற்கண்ட இடத்தில் மின் தகன மேடை அமைக்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் தமுமுக நிா்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் நரேஷ்குமாா், பங்கு பேரவை இறை மக்கள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.