செய்திகள் :

சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

post image

“பல பதிற்றாண்டுகளாக ரத்தம் சிந்தப் போரிட்டுக்கொண்டிருந்த காங்கோவுக்கும் ருவாண்டாவுக்கும் இடையே உடன்பாட்டுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இணைந்து, ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். காங்கோ, ருவாண்டோ பிரதிநிதிகள் வாஷிங்டன் வந்து கையெழுத்திடுகிறார்கள். ஆப்பிரிக்காவுக்கு இது மிகவும் உன்னதமான நாள், இன்னும் சொல்லப் போனால், உலகத்துக்கே உன்னதமான நாள்! இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்  இடையே போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது, செர்பியாவுக்கும் கொசாவாவுக்கும் இடையே போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது, எகிப்துக்கும் எதியோப்பியாவுக்கும் இடையே அமைதி நிலவச் செய்ததற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கில் ஆப்ரஹாம் உடன்பாடு எட்டப்பட்டதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. இல்லை, நான் என்ன செய்தாலும், ரஷியா / உக்ரைன், இஸ்ரேல் / ஈரான், விளைவுகள் என்னவாக இருந்தாலும், எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. ஆனால், இந்த மக்கள் அறிவார்கள், எனக்கு அதுவே போதும்!”

_ ‘ட்ரூத் சோசியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவுதான் இது.

இப்போதெல்லாம் அதிபர் டிரம்ப் என்ன செய்திருக்கிறார்? செய்யப் போகிறார்? அதாவது அமெரிக்க அரசு என்ன செய்கிறது? என்ன செய்யப் போகிறது? என எல்லாவற்றையுமே டிரம்பின் ட்ரூத் சோசியல் பதிவுகளைத் தொடர்வதன் மூலம்தான் உலகமே தெரிந்துகொள்கிறது. இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையே ட்ரூத் தளத்தில் டிரம்ப்தானே அறிவித்தார்!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஓராண்டுக்குள்ளேயே, ‘ஒன்றுமே  செய்யாததற்காக’ பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை நினைத்து நினைத்து எப்போதுமே எரிச்சல்படும் டிரம்ப், கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அங்கலாய்ப்பையும்தான் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அமெரிக்கர்கள்.

இதுவரையிலும் தனக்கு நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்று உலகில் எந்தவொரு தலைவராவது அல்லது நபராவது இந்தளவுக்கு வலியுறுத்தி வந்திருப்பார்களா; ஆதரவு திரட்டியிருப்பார்களா என்று தெரியவில்லை. டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று யாராவது சொன்னால்கூட உடனே அந்தப் பதிவையெடுத்து டிரம்ப் தன்னுடைய பக்கத்தில் வெளியிடுகிறார் (டிரம்ப்பின் ‘சமாதான வேட்கை’ நம்ம ஊர் மீம் கிரியேட்டர்களுக்கே நிறைய வாய்ப்புகளைத் தந்தது, நாட்டாமை ஸ்டைலில்!).

கனடாவில் நடந்துகொண்டிருந்த ஜி 7 மாநாட்டிலிருந்து பாதியிலேயே புறப்பட்டு வந்து வெள்ளை மாளிகையில் முன்னெப்போதுமில்லாத வகையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு விருந்தளித்தார் டிரம்ப். முனீர் நாடு திரும்பியதும் நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பரிந்துரைத்தது (ஆனால் என்ன, அடுத்து ஈரான் அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்காவே நேரடியாகக் குண்டுகளை வீசித் தாக்கியது).

ஒருபுறம் காஸா பகுதியில் தொடச்சியாகத் தாக்குதல்களை நடத்தி மனிதப் பேரழிகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இஸ்ரேல், எதற்காகத் திடீரென ஈரான் மீது  தாக்குதல் நடத்தியது, அதுவும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறது என்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுடன்? இவை தங்களுக்கும் தெரியும் என்றே டிரம்ப் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் தாக்கியது, இதுவரையில் இஸ்ரேல் சந்திக்காத பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் ஈரானும் பதிலடி தந்துகொண்டிருந்தது. அமெரிக்காவும் ஈரானும்கூட பரஸ்பரம் மிரட்டிக்கொண்டிருந்தன. இரு பக்கமும் தயங்கித் தயங்கி நாடுகள் அணி திரண்டுகொண்டிருந்தன. இந்தவேளையில் திடீரென ஒரு நாள் நேரடியாகக் களத்தில் இறங்கிய அமெரிக்க விமானங்களும் நீர்மூழ்கிகளும் ஈரான் அணு ஆய்வு மையங்களென அறியப்படும் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகியவற்றின் மீது தாக்குதல்களை நடத்தின (முற்றிலுமாக அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவிக்க, சும்மா கொஞ்சம் சேதம் என ஈரான் மறுத்தது. ஆமாம் என்கிறார்கள், இல்லை என்கிறார்கள். உண்மை என்னவென  இதுவரையிலும் உலகிற்குத் தெரியாது). இந்தத் தருணத்தில்தான் யாருமே எதிர்பாராத வகையில் பதிலடியாக ஒரு டிவிஸ்ட் நடந்தது. ஏற்கெனவே சொன்னபடி, மத்திய கிழக்கில் கத்தார் மற்றும் இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் மூலம்  இதேபோல இந்தப் பகுதியிலுள்ள அமெரிக்காவின் பிற தளங்களும் தாக்கப்படும் என எச்சரித்தது ஈரான்.

இந்தச் சூழ்நிலையில்தான் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் இரு நாடுகளுமே கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு என்றும் வழக்கம்போல ட்ரூத் சோசியல் தளத்தில் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

“இஸ்ரேல் மற்றும் ஈரான் என்னிடம் வந்தார்கள், ஏறத்தாழ ஒரே நேரத்தில், “அமைதி!” என்றார்கள். எனக்குத் தெரியும் அந்த நேரம் இப்போதுதான். உலகமும் மத்திய கிழக்கும்தான் உண்மையிலேயே வெற்றியாளர்கள்! இரு நாடுகளும் அவர்களுடைய எதிர்காலத்தில் அபரிமிதமான அன்பு, அமைதி மற்றும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்... ... இஸ்ரேல் மற்றும் ஈரானின் எதிர்காலம் அளவற்றது, மாபெரும்உறுதிப்பாடுகளால் நிரம்பியது. கடவுள் உங்கள் இருவரையும் ஆசிர்வதிக்கட்டும்.”

(மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் பலவீனமாகத் தோன்றிய இந்த நேரத்தில் சண்டை தொடர்ந்திருந்தால் ஈரான் கை ஓங்கியிருக்கவும் கூடும் என்றொரு கருத்தும் இருக்கிறது!).

மழைவிட்டும் தூவானம் விடாததைப் போல ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்ந்தபோது, இஸ்ரேலுக்கும் சேர்த்து, ஹேய் கப் சிப் கபர்தார், சண்டை நிறுத்தம் நடைமுறையில் இருக்கிறது, தயவுசெய்து யாரும் மீறாதீர்கள் என்றும் டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

“அனைவருக்கும் பாராட்டுகள். இஸ்ரேல் - ஈரான் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுவிட்டன. 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டது“ என்ற அவர், கடந்த சில நாள்களாக மீண்டும் மீண்டும் “அணு ஆய்வு மையங்களை அழித்துவிட்டோம்” என்று கூறத் தொடங்கினார். ஒரு இடைவெளியில், சம்பந்தமில்லாமல், நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையைக் கைவிட வேண்டும் என்றும் இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டார்.

சில நாள்கள் ‘ஓய்வுக்குப் பின்’ படுமோசமான தாதாக்கள் மொழியில், ‘இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக எப்படி முட்டாள்தனமாகச் சொல்கிறார் ஈரான் ‘உயர் தலைவர்’ கமேனி என்று தொடங்கி, உலகின் சக்திவாய்ந்த அமெரிக்க ராணுவம் அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கும்; மிகவும் மோசமான, கேவலமான சாவிலிருந்து அவரை நான்தான் காப்பாற்றினேன், அவர் எனக்கு நன்றியல்லவா சொல்லியிருக்க வேண்டும்?’ என்று விலாவரியாக ட்ரூத்தில் கடுப்படித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

உடனே, பதிலடியாக ஈரானுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி, ஈரான் தாக்குதலில் தரைமட்டமாகிக் கொண்டிருந்த இஸ்ரேலுக்கு ‘டாடி’யைத் தேடி ஓடுவதைத் தவிர வேறு  வழியில்லை என்று நக்கலடித்ததுடன், அமைதி திரும்ப வேண்டுமென்றால் டிரம்ப் கொஞ்சம் அடக்கிவாசிக்க வேண்டும்; ஈரானியத் தலைவரைப் பற்றி இப்படி மரியாதைக் குறைவாகப் பேசக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.

எதிர்வினையாக, "தேவை ஏற்பட்டால்" ஈரான் மீது மீண்டும் குண்டுவீசத் தாம் தயாராக இருப்பதாகத் தற்போது அறிவித்திருக்கிறார் டிரம்ப்! ஆக, மறுபடியும் சண்டை தொடங்கிவிட்டாற்போலதான்.

அதிரடியாகத் தரை லெவலுக்கு இறங்கிக் கருத்துத் தெரிவிப்பது டிரம்ப்புக்குப் புதிதல்ல.

இதே பிரச்சினையில் ஈரானிய அணு ஆய்வு மையங்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை என்று சொன்னதற்காக, “சிஎன்என், நியூ யார்க் டைம்ஸின் போலி செய்தியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்!!! கெட்ட நோக்கத்துடன் கூடிய மோசமான நபர்கள்!!!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“போலியான சிஎன்என் செய்தி சேனலுடன் இணைந்து நியூ யார்க் டைம்ஸ் மறுபடியும் ஏமாற்றுகிறார்கள். (ஈரான் அணுநிலையங்களைத் தாக்கிய) நம் விமானிகளின்  சாதனைகளைப் பொருளற்றதாக்கப் பார்க்கிறார்கள். இந்த செய்தியாளர்கள் எல்லாம் ரொம்ப மோசம், நோய்மைப்பட்டவர்களுடன்கூட. நாம் பெற்ற பெரு வெற்றிக்காக அவர்கள் பெருமைப்பட வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்; பதிலாக நம் நாட்டை எப்போதும் மோசமாகச் சித்திரிக்கப் பார்க்கிறார்கள். முழு அழிவு!”

“சிஎன்என்னிலிருந்து நடாஷா பெர்ட்ராண்டை வெளியேற்ற வேண்டும், மூன்று நாள்களாகப் பார்க்கிறேன், பொய்யான செய்திகளைத் தருகிறார். உடனடியாக அவர் கண்டிக்கப்பட வேண்டும், பிறகு “ஒரு நாயைப் போல” வெளியே தூக்கியெறியப்பட வேண்டும். (ஈரான்) அணு ஆய்வு நிலையச் செய்தியில், ஒட்டுமொத்தமாக அழித்த நம்முடைய நாட்டுப்பற்று மிக்க விமானிகளை மோசமானவர்களாகச் சித்திரித்து அழிக்கப் பார்க்கிறார்! போலி சிஎன்என் செய்தி சேனலில் பணியாற்ற அவரை அனுமதிக்கக் கூடாது. ஒருகாலத்தில் பிரமாதமாக இருந்த சிஎன்என்னின் பெருமையை இவரைப் போன்றவர்கள்தான் குலைத்துவிட்டார்கள்... ... நடாஷாவைத் தூக்கியெறியுங்கள்!”

ஈரான் அணு ஆய்வு மையங்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை என்று (உண்மையை?) செய்தியைத் தந்ததற்காகத்தான் டிரம்ப்பின் இவ்வளவு வசைப்பாட்டுகளும்.

எதற்காக என்றே தெரியாமல், ஈரான் அணு ஆய்வு நிலையங்களுக்கான விமானங்கள் பற்றிய தகவலைக் கசிய விட்டவர்கள் ஜனநாயகக் கட்சியினர்தான். அவர்கள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும் என்றும்கூட பதிவிட்டிருக்கிறார் டிரம்ப்.

அமைதிக்கான நோபல் பரிசுதான் அதிபருடைய அபிலாஷை என்றால் பேசாமல் எல்லாருமாகச் சேர்ந்துகொடுத்துவிட்டுப் போகலாம். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் தொடர்ந்த, இந்தியா – பாகிஸ்தான் சண்டையைத் தான்தான் முடித்துவைத்ததாக பதினாறு, பதினேழு முறைக்கு மேலே அவர் கூறிவிட்டார். ஏதோவொரு வகையில் ஆங்காங்கே நாடுகள் இடையிலான சண்டைகள் முடிவுக்கு வருவதாகத் தோன்றினாலும் பேசாமல் அந்த கிரெடிட்டை எல்லாம் அப்படியே அதிபர் டிரம்ப்புக்கே அர்ப்பணித்துவிடலாம்! இருந்தாலும் இந்தச் சண்டைகள் எல்லாம் எங்கிருந்து தோன்றுகின்றன? யாரால் நடத்தப்படுகின்றன? யாருக்குப் பயனளிக்கின்றன?

சமாதானத்தை உபதேசிக்கும் அதிபர் டிரம்ப் அறியத்தானே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன? ஹமாஸ் தீவிரவாதிகள்தான் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றால், சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? இன்னமும் ஏன் தாக்குதல்கள் தொடருகின்றன? ஒட்டுமொத்தமாக காஸாவே அழிக்கப்படுகிறதே, உணவின்றி, தண்ணீரின்றி, இருக்க இடமின்றி ஒரேயடியாக மக்கள் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே? பாலஸ்தீனத்தில் தங்களுடைய ஆதாயத்துக்காக இதே ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதும் வளர்த்ததும் இதே மேற்குலக நாடுகள்தானே? வரலாறு மீண்டு இப்போதும் ஹமாஸுக்கு எதிரான குழுக்களுக்கு ஆயுதங்களைத் தந்து இஸ்ரேல்தானே ஆதரித்துக்கொண்டிருக்கிறது?

ஆக, இவர்களுக்கு எல்லாம் எங்காவது போர்கள் நடந்துகொண்டே இருக்க வேண்டும். காரணம் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆயுதங்கள், ஆயுத தளவாடங்கள் உச்சத்தில் இருக்கும் சில நாடுகளின் ஆயுதங்கள் விற்றுக்கொண்டே இருக்க வேண்டும்! ஆயுத வணிகத்தில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அரசியலிலும் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.

யார் யார் ஆயுதங்கள் விற்கிறார்கள்? எந்தெந்த நாடுகளுக்கு விற்கிறார்கள்? யார் யார் கடன் தருகிறார்கள்? அல்லது கடனுக்கு ஆயுதங்களைத் தருகிறார்கள்? உலகம் முழுவதும் எதற்காக ஆயுதங்கள் குவிக்கப்படுகின்றன? சுற்றிச் சுற்றி இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் சில குறிப்பிட்ட இடங்களில்தான் சென்று நிற்கும்!

அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து அதிரடியான எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவின் அடுத்த மாகாணம் கனடா, கிரீன்லாந்து இணைப்பு, குடியேற்றம், குடியுரிமைப் பிரச்சினை, குடியேறிகள் வெளியேற்றம், பனாமா கால்வாய் உரிமை, அமெரிக்காவுடன் வணிகம் புரியும் நாடுகளின் மீது எதிர்வரி விதிப்பு... பட்டியல் தொடர்ந்துகொண்டிருக்கிறது, ட்ரூத் சோசியலில்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும்போதே வாக்குறுதியைப் போலவே, அமெரிக்காவும் நேட்டோவும் நேரடியாக சம்பந்தப்பட்ட உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், என்ன முயன்றும் டிரம்ப்பால் இன்னமும் நிறுத்த முடியவில்லை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கே உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை வரவழைத்து நேருக்கு நேராகக் ‘கட்டப் பஞ்சாயத்து பாணியில்’ பேசப் போக, உள்ளதும் போச்சுடா என்ற கதையாகி ஸெலன்ஸ்கி எகிறிவிட்டார்.

டிரம்ப் அறிவித்தபடி, இன்னேரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் காங்கோ – ருவாண்டா இடையிலான சண்டை நிறுத்த உடன்பாடு கையெழுத்தாகிவிட்டிருக்கும். என்றாலும், அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படும் வரையிலும் உலகளாவிய சமாதான முயற்சிகளும் உடன்பாடுகளும் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம் – கூடவே ட்ரூத்தில் அறிவிப்புகளையும்.

ஆனால், தேவைப்படும் (அல்லது தேவைப்படாத) நாடுகளில் தொடர்ந்து சண்டைகளும் தாக்குதல்களும் நடந்துகொண்டுதானிருக்கும். அமெரிக்காவின் ஆதரவு அல்லது ஆசிர்வாதத்துடன் இஸ்ரேல் தொடர்ந்து காஸாவில் நடத்திவரும் தாக்குதல்களில் ஜூன் 27 வரையிலான 631 நாள்களில் கொல்லப்பட்டவர்கள் 56,230 பேர்! இவர்களில் பெரும்பாலானோர் ஒன்றுமறியா பொதுமக்கள். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள்... வித்தியாசமில்லாமல் கொல்லப்படுகிறார்கள். ஒரு பக்கம் சமாதானங்களைப் பேசிக்கொண்டே இன்னொரு புறம் ஆயுதங்களைக்  கொண்டு உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மரண ஓலங்கள் கேட்கின்றன, கொத்துக்கொத்தாகப் பிணங்கள் விழுகின்றன!

சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்

சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!

_ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

 வால் துணுக்கு

“கடைசியாக அது நடந்தே விட்டது. ஜனநாயகக் கட்சியினர் எல்லைமீறி விட்டார்கள். நூறு சதவிகித கம்யூனிஸ்ட் பைத்தியமான ஸோரன் மம்தானி, நியூ யார்க் மேயராவதற்கான தொடக்கச் சுற்றில் வென்றுவிட்டார். ஏற்கெனவே தீவிரமான இடதுசாரிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால், இது ரொம்பவும் அபத்தம். அவர் பயங்கரமாக இருக்கிறார், குரல் கரடுமுரடாக இருக்கிறது, அவர் நன்றாகவே இல்லை. எல்லாம் டம்மிகள், அவரை ஆதரிப்பவர்கள்... ஆம். நம் நாட்டின் வரலாற்றில் இது முக்கியமான தருணம்தான்”.

_ நியூ யார்க் மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயகக் கட்சிக்குள்  நடைபெற்ற தொடக்கநிலைச் சுற்றில் வெற்றி பெற்றதற்காக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மம்தானிக்கு அதிபர் டிரம்ப் வழங்கியுள்ள ‘பாராட்டுச் சான்றிதழ்’!

இதையும் படிக்க... சொல்லப் போனால்... வெட்கப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!

Write up on the Israel-Iran-US war and US President Trump's desire for the Nobel Peace Prize...

பழம்பெருமைமிகு இந்தியா...3 கணித, அறிவியல், வானியல் கண்டுபிடிப்புகள்!

பழங்கால இந்தியாவில் அறிவியல், வானியல், கணிதம் ஆகிய துறைகளில் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உதவி வருகின்றன. அறிவியல்ஐசக் நியூட்டன் 1966ல் ... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...2 கட்டடக் கலையின் சிறப்புகள்!

இந்தியாவின் பொறியியல் அல்லது கட்டடக் கலை சாதனைகள் மேற்கத்திய நாடுகளுக்குப் போட்டியாக அல்லது அதனை மிஞ்சுவதாகவே இருந்தன. பொறியாளர்களின் துல்லிய தன்மை, வடிவமைப்பு, அறிவு என பல கட்டடங்கள், நினைவுச் சின்னங... மேலும் பார்க்க

உலகை மாற்றவிருக்கும் நேட்டோவின் முடிவுகள்!

தங்களின் ஒவ்வோா் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 5 சதவீதம் தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் 2 சதவீத உள்நாட்டு உற்பத்த... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா... முந்தைப் பெருமிதங்களும் இன்றைய பொருளாதாரமும்!

விஞ்ஞானம், மருத்துவம் மட்டுமின்றி அனைத்துத் துறைகள் மற்றும் கலைகளிலும் இந்தியா சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் பல இருக்கின்றன. ஆரம்ப காலத்திலும் இந்தியா, பொருளாதாரத்தில் முதன்மையானதாக இருந்திருக்கிறத... மேலும் பார்க்க

ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள்! செறிவூட்டல் என்றால் என்ன?

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரான் அணுக்கரு ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேறிவிட்டது. இன்னும் சில நாள்களில் அல்லது சில மாதங்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... வெட்கப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!

ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என்று அதிரடியாகக் குறிப்பிட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.தில்லியில் சில நாள்கள் முன் நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசிய அமித் ஷா, “... மேலும் பார்க்க