வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வா?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்- 3 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்
புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் பலியானார்கள்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பூரியில் உள்ள குந்திச்சா கோயிலுக்கு முன்னால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பக்தர்கள் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்கள் போலகரைச் சேர்ந்த பசந்தி சாஹு, பாலிபாட்னாவைச் சேர்ந்த பிரேமகாந்த் மொஹந்தி மற்றும் பிரவதி தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் அவர்கள் மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 'பஹாட' சடங்கு தொடங்கவிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதனால் தேர்களில் பொருத்தப்பட்ட தெய்வங்களைப் பார்க்க முயன்ற பக்தர்கள் திடீரென பெருமளவில் குவிந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்டநெரிசலில், மூன்று பக்தர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக்காண ஸ்ரீகுந்திச்சா கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ளனர். ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.