சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடி: 4 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை தி.நகரைச் சேர்ந்தவர், வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேர்வதற்காக அவருக்கு வந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் மோசடி செய்தவர்கள் அனுப்பிய லிங்க் மூலமாக ஆன்லைன் பங்கு வர்த்தக வலைதளத்தில் கிளிக் செய்தவரை ஐபிஓவில் முதலீடு செய்ய சொல்லி தூண்டியும், இணையதளம் மூலம் பங்கு வர்த்தகம் செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று மோசடி நபர்கள் கூறிய வார்த்தைகளை நம்பி பல்வேறு வங்கி கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூபாய் 2 கோடியே 26 லட்சம் பணத்தினை முதலீடு செய்து இழந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் மோசடி குற்றவாளிகள் ஒன்றாக சேர்ந்து போலி வங்கி கணக்குகளை துவங்கி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து பணத்தை பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக சத்தியநாராயணன், மணிவேல், ரோஷன், சிம்சேன் ஆகிய 4 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கமிஷனாக பெறப்பட்ட ரூபாய் 4,38,000/- பணம் மற்றும் மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை புழல் மத்திய சிறையில் புழலில் அடைக்கப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வணிக நோக்கத்திற்காக தற்காலிகமாக வாடகை கட்டடங்களில் தங்கி வங்கிகளில் பல நடப்புக் கணக்குகளை தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முதலீட்டை பெறுவதற்கும், ஏஜெண்டுகள் மூலம் நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கும் பொது மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த குழு செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரம் மூலம் குறிவைக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Summary
Police have arrested 4 people involved in an online trading scam in Chennai.