இரவு முழுவதும் தூங்கவில்லை; டி20 உலகக் கோப்பை நினைவுகளை பகிர்ந்த ரோஹித் சர்மா!
கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை: ‘தனியாகச் சென்ற மாணவி மீதே தவறு’ - ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை!
கொல்கத்தா: கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு தனியாகச் சென்றது தவறு என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மதன் மித்ரா பேசியிருப்பது அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவரை இந்நாள் மாணவா் இருவரும், முன்னாள் மாணவா் ஒருவரும் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் அம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை 3 பேரையும் கொல்கத்தா போலீஸ் கைது செய்தது. இந்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
என்ன சொன்னார்?
திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மதன் மித்ரா சனிக்கிழமை(ஜூன் 28) பேசுகையில், “இச்சம்பவம் மாணவிகளுக்கு ஒரு செய்தியை கொண்டு சேர்க்கிறது. அது என்னவெனில், கல்லூரி மூடியிருக்கும் வேளையில் உங்களை(பெண்களை) எவர் ஒருவராவது அழைத்தால் அப்போது அங்கு தனியாகச் செல்லாதீர்கள். அதனால் எவ்வித நல்லதும் நடக்கப் போவதில்லை. பாதிக்கப்பட்ட அந்த பெண் சம்பவ இடத்துக்கு அன்று செல்லாமல் தவிர்த்திருந்தால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்காது” என்றார்.
அவரது இந்த கருத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் மீதே முதலில் தவறு இருப்பதாக பொருள் உணர முடிவதாகக் கூறி அவருக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏ மதன் மித்ரா பேசியிருப்பது அவரது சொந்த கருத்து. இதற்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் கண்டனம் தெரிவித்தும் உடனடியாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டது.
இந்தநிலையில், இது தொடர்பாக மதன் மித்ராவிடம் உரிய விளக்கம் கேட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைமை இன்று(ஜூன் 29) அழைப்பாணை அனுப்பியுள்ளது. மூன்று நாள்களுக்குள் அவர் விளக்கமளிக்க அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Kolkata gangrape case: TMC issues show-cause notice to Madan Mitra for his controversial remarks