ஆ.ராசாவை கண்டித்து ஜூலை 1-ல் பாஜக ஆா்ப்பாட்டம்: நயினாா் நாகேந்திரன்
அதிமுகவிற்கு பாஜக சுமையா? - சீமான் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ”மனதின் குரல்” நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.
பின்னர், செய்தியாளர்ளிடம் பேசிய அவர், ”வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவிற்கு பா.ஜ.க கூடுதல் சுமையாக இருக்கும் என சீமான் கூறியுள்ளார். சுமை இல்லாத கட்சி எது என்று அதையும் அவரே விளக்கமாக கூறி இருக்கவேண்டும். யார் சுமை, யார் சுமை இல்லை என்பது குறித்து சீமான் விளக்கமாக கூறியிருக்க வேண்டும்.
த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யிடம் நான் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே ஓர் அணியில் திரள வேண்டும் என்று கூறி இருக்கிறேன். நான் நேற்று முதல் ஓர் கோஷத்தை ஆரம்பித்திருக்கிறேன்.

”வேண்டாம் இனி திமுக வேண்டாம்” என்பதுதான் அது. இந்த அடிப்படையில் எல்லோரும் சிந்தனை செய்ய வேண்டும். நாட்டில் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகள்,
ஒரு சிறுவனை சிறையில் அடித்து கொலை செய்துள்ளார்கள் காவல்துறை. கர்ப்பிணி பெண்ணை காவல்துறை மிதித்து துன்புறுத்தியுள்ளார்கள். மிகவும் ஆபத்தான போதை பொருளை மிகவும் மிக முக்கியமான நடிகர் ஒருவர் பயன்படுத்தி வருவதாக பின்னணி பாடகி ஒருவர் சொல்லியுள்ளார். அவரது பெயரை நான் கூற விரும்பவில்லை.
இப்படி தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான் ”வேண்டாம் இனி தி.மு.க வேண்டாம்” என்ற தாரக மந்திரத்தை தேர்தல் வரை எடுத்துச் செல்ல இருக்கிறோம்.
மதுரையில் நடத்திய மாநாட்டில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தந்தனர். மாநாடு குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறும்போது ”இது மாநாடு கிடையாது. நாங்கள் நடத்துவதுதான் மாநாடு” என்று கூறினார். நான் கேட்கிறேன் அவர்கள் எங்கு மாநாடு நடத்தினார்கள்? இந்த மாநாடு தமிழ்நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.

வரும் 2026-ம் ஆண்டு ஆலமரமாக எல்லோருக்கும் பயன் தரும். எல்லோருக்கும் நிழல் தரும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் அமையும். தாமிரபரணி நதியை தூய்மை படுத்திட தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததா? நிதி கேட்டதா? தமிழக அரசாங்கம் அதற்கு முயற்சிக்க வேண்டும். நாங்கள் அதற்கு உதவி செய்வோம். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையின் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து நிச்சயம் பேசுவேன்” என்றார்.