``வேளாண் மசோதா போன்று வக்ஃப் திருத்த மசோதா-வை திரும்பப் பெற வைப்போம்'' - ஜவாஹிருல்லா
மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜுலை 6 ஆம் தேதி மாநாடு மற்றும் பேரணி மதுரை வண்டியூர் பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கான தொடக்க விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்கள் தொகைக்கேற்ப ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரையில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜூலை 6 ஆம் தேதி மதுரையில் எழுச்சிப்பேரணியும், 5 லட்சம் பேர் கலந்துகொள்ளும் மாநாடும் நடைபெறவுள்ளது.

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. குறிப்பாக நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் 80 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 24 பேர் மட்டும் உள்ளனர்.
இதேபோல் சட்டமன்றங்களிலும் குறைவான பிரதிநிதித்துவமே உள்ளது. சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்களில் 4 பேர் மட்டும்தான் முஸ்லிம் உள்ளனர். சட்டம் இயற்றும் மன்றங்களில் முஸ்லிம்களுக்கு பிரத்திநிதித்துவம் கொடுப்பதுதான் ஜனநாயாகத்திற்கு நல்லது.
வக்ஃப் திருத்த சட்டம் தீய நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. உ.பி- யில் முஸ்லிம்களின் இடங்கள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டது, வக்ஃப் திருத்த சட்டம் மற்றொரு புல்டோசர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.
இச்சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது உமித் போர்ட் மூலம் வக்ஃப் சொத்துக்களின் ஆவணங்களை பதிவு செய்யவேண்டும் என்று கூறுவது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உள்ளது.

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற்றதைப் போன்று வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் வரையில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வெற்றி பெறுவோம்.
2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் தொடர்வோம். திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, மகளிர் உரிமைத் தொகை வழங்குவதன் மூலம் திமுக ஆட்சிக்கு மக்கள் நன்றி சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் முஸ்லிம்களுக்கு அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும். கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வரலாற்றில் கூட்டணி ஆட்சி என்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற யதார்த்தம் அது புரியாமல் சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.