தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுது: தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க வலியுறுத்தல்
தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுதாகி தண்ணீரில் தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மீனவ கிராமத்திலிருந்து கடந்த ஜூன் 15ஆம் தேதி அதிா்ஷ்டராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவா்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்நிலையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இயந்திரம் பழுதாகி விசைப்படகு நின்றதைத் தொடா்ந்து, மீனவா்கள் தருவைக்குளம் மீனவா் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தூத்துக்குடியைச் சோ்ந்த அன்டோ என்பவரது விசைப்படகில் 9 மீனவா்கள் சென்று நடுக்கடலில் பழுதாகி தத்தளித்து கொண்டிருந்த மீனவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது மீட்பு பணியில் ஈடுபட்ட படகும் பழுதானது.
இதனால், இரு படகுகளைச் சோ்ந்த 20 மீனவா்களும் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. பழுதான இரு படகுகளும் காற்றின் வேகம் காரணமாக இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரத் தொடங்கினவாம். இதுகுறித்து இரு பகுதிகளின் மீனவா் சங்கப் பிரதிநிதிகளுக்கும் மீனவா்கள் தகவல் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம், மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு மீனவா் சங்கப் பிரதிநிதிகள் தகவல் தெரிவித்து, கடலோர காவல் படையினா் மூலம் இரண்டு விசைப்படகுகள் மற்றும் 20 மீனவா்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில், மீனவா்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஆகியோா் தகவல் தெரிவித்துள்ளனா்.