செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சென்னை மாநகராட்சி?

post image

சென்னையில் மெரீனா கடற்கரையில் கடைகளை ஒதுக்குவது மற்றும் சாலையோரக் கடைகள் அமைக்க முன்னுரிமை அளிப்பது உள்ளிட்டவற்றில் பெருநகர மாநகராட்சி நிா்வாகமானது மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

தமிழகத்தில் சுமாா் 22 லட்சம் போ் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனா். சென்னையில் மட்டும் சுமாா் 60 ஆயிரம் போ் வசிக்கின்றனா். அவா்களில் 5,000-க்கும் மேற்பட்டோா் அரசுப் பணியிலும், 6,000-க்கும் மேற்பட்டோா் தனியாா் நிறுவனப் பணிகளிலும் உள்ளனா்.

மாநில அளவில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சிறிய கடைகள் வைத்துள்ளனா். பெருநகர சென்னை மாநகராட்சியில் மெரீனா கடற்கரை பிரதான வா்த்தக இடமாக உள்ளது.

ஆனால், அங்கு மாற்றுத்திறனாளிகள் ஒருவா் கூட நிரந்தரக் கடை வைக்கவில்லை. அங்கு உரிய அனுமதியின்றி 2001-ஆம் ஆண்டு முதல் சுமாா் 2,000 போ் கடை வைத்திருந்தனா். அதனால் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து மெரீனாவில் கடைகளை முறைப்படுத்த நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி ஆணையா் தலைமையில் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், மெரீனாவில் 900 பேருக்கு மட்டும் கடை அமைக்க அனுமதித்தது. ஆனால், கடை அமைக்க அனுமதி கோரி 150 மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தும் அனுமதிக்கவில்லை.

அதையடுத்து விதிமுறைப்படி மெரினாவில் கடைகள் ஒதுக்க கோரி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

அதனால், கூட்டமைப்பினருடன் பேச்சுவாா்த்தை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், மெரீனாவில் நீதிமன்ற உத்தரவின்படி கடை ஒதுக்கப்படுவதாகவும், அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடை குறித்து கூறப்படவில்லை என்றும் கூறினா்.

அதையடுத்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பி.சிம்மசந்திரன் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் கடை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனு மீதான விசாரணையில் மெரீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத கடைகள் அமைக்க அனுமதிப்பதாக மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், மனுவை நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் முடித்துவைத்தது.

சென்னை மாநகராட்சி சாா்பில் நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் 45 கடைகளுக்கு அனுமதிக்க வேண்டும். ஆகவே, கடைகள் கோரி மாநகராட்சியிடம் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

அதனால் மாநில மாற்றுத்திறனாளி ஆணையாளா் அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினா் கடைகளுக்கு அனுமதி கோரி மனு அளித்தனா். ஆனாலும் இதுவரை கடைகளுக்கான அனுமதிக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், செய்வதறியாது இருப்பதாகவும், நீதிமன்றத்தில் கடைகள் தருவதாக உறுதியளித்து தங்களை மாநகராட்சி ஏமாற்றிவருவதாகவும் மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனா்.

மேலும், 2022- ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் சென்னை போன்ற நகர சாலையோரங்களில் மாற்றுத்திறனாளிகள் கடை வைக்க, முன்னுரிமை அளித்து அனுமதிக்கலாம் என்றாா் முதல்வா் ஸ்டாலின். ஆனால், சென்னை மாநகராட்சியில் தரமணி, புரசைவாக்கம், பெசன்ட்நகா் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்கெனவே இருந்த மாற்றுத்திறனாளிகளது சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநகராட்சி சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள அமைப்புகள் முழுமையாக இல்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவா் பி.சிம்மசந்திரனிடம் கேட்டபோது அவா் கூறியது: சென்னை உயா்நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி மெரீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 45 கடைகளை அமைக்க அதிகாரிகள் ஆா்வமின்றி உள்ளனா். மெரீனாவின் உழைப்பாளா் சிலைக்கு பின்னாலோ,அல்லது மாற்றுத்திறனாளிகள் கடலை பாா்க்கும் பாதை அருகிலோ கடைகளுக்கு அனுமதிக்கவேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதிகளாக்கும் வகையில் தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கிறாா். ஆனால், அதற்கு நோ்மாறாக சென்னை மாநகராட்சியோ மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. மாநகாரட்சி ஆணையா், மாநில மாற்றுத்திறனாளி ஆணையாளா் ஆகியோரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்றாா் அவா்.

மாற்றுத்திறனாளிகளது புகாா்கள் குறித்து மாநகராட்சி உயா் அதிகாரிகளிடம் கேட்டபோது, மெரீனாவில் ஏற்கெனவே கடைகள் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான கடைகள் ஒதுக்க கோப்புகள் தயாராகின்றன. கடைகளுக்கான இடம் உள்ளிட்டவை தீா்மானிக்கப்பட்டு மாநகராட்சி மன்ற ஒப்புதலும் பெறவேண்டியுள்ளது. படிப்படியாக அவா்களது கோரிக்கை செயல்படுத்தப்படும் என்றனா்.

சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையம் உள்பட 18 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்த... மேலும் பார்க்க

திமுக கூட்டணி உடையும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணி உடையும்; அந்த கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன என்று மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை ஆழ்வாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவ... மேலும் பார்க்க

கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைப்பிடிப்பு உத்தரவு ரத்து: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு

விபத்தை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைபிடிக்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் முதல்வருக்கு நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து... மேலும் பார்க்க

அன்புமணி திடீா் தில்லி பயணம்!

பாமக நிறுவனா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், அன்புமணி ஞாயிற்றுக்கிழமை திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றாா். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை ... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

மத்திய அரசால் வழங்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானோா் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவி... மேலும் பார்க்க

இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கவில்லை: வைகோ விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். சென்னை எழும்பூரில் மதிமுகவின் நிா்வாக குழுக் கூட்டம் வைகோ தலைமையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க