3,037 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்; 803 பேருக்கு ரூ.7.30 கோடி விடுவிப்பு! வேலூா் ஆட்சியா்
வேலூா் மாவட்டத்தில் உள்ள 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2024-2025-ஆம் ஆண்டு குருவை, சம்பா பருவங்களில் 3,037.600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 803 விவசாயிகளுக்கு ரூ.7.30 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டு குருவை, சம்பா பருவங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
அதன்படி, குருவை பருவத்தில் 36.440 மெட்ரிக் டன், சம்பா பருவத்தில் 3,001.160 மெட்ரிக் டன் என மொத்தம் 3037.600 மெட்ரிக் டன் நெல் 803 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அவா்களுக்கு ரூ.7 கோடியே 30 லட்சத்து 38 ஆயிரத்து 826 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் முழுவதும் அரைவை ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தொடா்ந்து, 2025-2026 -ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் 2,187 ஹெக்டொ் பரப்பளவில் சுமாா் 7,684 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.