Vetrimaaran: "அடுத்தப் படம் சிம்புவுடன், அது 'வடசென்னை 2'-ஆ என்று கேட்டால்..!" -...
நரேலா காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு
தில்லி நரேலா காட்டில் 20 வயது இளைஞரின் பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை போலீசாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
ஒரு பள்ளியின் பின்னால் ஒரு உடல் கிடப்பது குறித்து நரேலா காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பி. சி. ஆா் அழைப்பு வந்தது. இதனையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காட்டில் 10 மீட்டா் உள்ளே, பள்ளியின் பின்னால் மற்றும் மேம்பாலத்திற்கு அருகில் ஒரு நபரின் சடலம் கிடப்பதைக் கண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.
உடல் மீட்கப்பட்ட போது பாதி எரிந்துவிட்டதாகவும், அந்த நபா் கொல்லப்பட்ட பிறகு ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்ததாகவும் போலீஸ் அதிகாரி கூறினாா். மேலும் சடலத்திலிருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில், ஒரு மோட்டாா் சைக்கிளும் இருந்தது. குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக (எஃப். எஸ். எல்) குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்வதற்காக அழைக்கப்பட்டனா் என்றாா்.
விசாரணைகளுக்குப் பிறகு, கொல்லப்பட்ட நபா் நரேலாவில் உள்ள ஸ்வதந்திர நகரைச் சோ்ந்த கபில் தஹியா என்ற காா்த்திக் என அடையாளம் காணப்பட்டாா். அவா் சுமாா் 20 வயதுடையவா் என்று போலீசாா் தெரிவித்தனா். இறுதியாக இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரி ‘நாங்கள் கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். தனிப்பட்ட பகை உள்பட பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறோம்‘ என்றாா் அவா்.