27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!
`பெற்றோரை இழந்த பெண்' - கறி விருந்து, சீர்வரிசை என திருமணத்தை நெகிழ வைத்த பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தற்போது பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிமீனா என்பவரின் தந்தை நுரையீரல் பாதிப்பில் இறந்துவிட்டதையும், தாய் செல்வி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதையும், மனவளர்ச்சி குன்றிய தங்கையுடன் குடிசை வீட்டில் பாண்டிமீனா ஆதரவு கரம் நீட்ட யாருமின்றி தவித்து நின்றதையும் அறிந்திருக்கிறார். இதையடுத்து பாண்டி மீனாவின் வீட்டுக்கு நேரில் சென்ற தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துயரம் சூழ்ந்திருக்கும் அவர்களது நிலையை கண்டு கலங்கினார்.

பின்னர், நர்சிங் படித்த பாண்டி மீனா குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுப்பதற்காக முயற்சி மேற்கொண்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2.40 லட்சம், தன் விருப்ப நிதியில் ரூ. 1.50 லட்சம், பேராவூரணி லன்யஸ் கிளப் சார்பில் சுமார் ரூ 1.50 லட்சம் நிதி உதவி பெற்று புதிய வீடு கட்டிக்கொடுத்தார். கடந்த 2022ம் ஆண்டு, புதுமனை புகுவிழா நடத்தி குத்துவிளக்கு ஏற்றி, பாண்டி மீனாவிடம் புதிய வீட்டை ஒப்படைத்தார்.
இதில் நெகிழ்ந்த பாண்டி மீனா குடும்பத்தினர், ``அப்பா இருந்து செய்ய வேண்டியதை நீங்க செய்திருக்கிறீர்கள் இனி நீங்க எனக்கு சார் கிடையாது அப்பா" எனக் கூப்பிட்டு ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தினார் பாண்டிமீனா. அதன் பின்னர் புது வீடு, புது வாழ்க்கை என பாண்டி மீனா குடும்பத்தின் மீது வெளிச்சம் படர்ந்தது. இந்தநிலையில், பதவி உயர்வில் பத்திரப்பதிவுத்துறை தலைவராக சென்னைக்கு சென்றுவிட்டார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

அதன் பிறகும் பாண்டிமீனா குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருந்து தனி கனவம் செலுத்தி வழி நடத்தி வந்தார். இந்த நிலையில் பாண்டி மீனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. தந்தையின் இடத்தில் இருந்து பாண்டி மீனாவுக்கும் அபிமன்யுவிற்கும் திருமணம் பேசி முடித்தார். அதன்படி பேராவூரணியில் இன்று திருமணம் நடைபெற்றது. பெற்றோரை இழந்த பாண்டி மீனாவிற்கு சீர்வரிசை பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் தன் சொந்த செலவில் செய்து கொடுத்து தந்தையாக முன் நின்று தன் கையால் மணமகனிடம் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
இதில் பாண்டி மீனா குடும்பத்தினர் நெகிழ்ந்தனர். இதையறிந்த பேராவூரணி மக்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிபர் செயலைப் பாராட்டினர். இதுகுறித்து பாண்டி மீனா தரப்பில் பேசினோம், ``ஓட்டைகள் நிறைந்த அந்த குடிசை வீட்டில் வறுமை மட்டும் குடியிருந்தது. ஒத்த ஆளா குடும்பத்தைக் காக்க போராடினாள் பாண்டி மீனா. துயரம் நிறைந்த இவர்களது நிலை அறிந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சார், வீடு கட்டும் பணியை தன் கவனத்தில் செய்தார். வீட்டு வேலை நடக்கும்போதே பாண்டி மீனா அம்மா தவறிட்டாங்க. பெற்றோர் இல்லாமல் மன வளர்ச்சி குன்றிய தன் தங்கையுடன் தவித்த பாண்டி மீனாவுக்கு தாய், தந்தையாகி தாங்கிப் பிடித்தார்.

வீட்டுப் பணிகள் முடிந்ததும் ஊரே மெய்ச்சுற மாதிரி பால் காய்ச்ச வைத்தார். பாண்டி மீனாவிற்கு புதிய வாழ்க்கையும், நம்பிக்கையும் கிடைத்தது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து அவர் பணிமாற்றலாகி சென்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அப்பா மகள் உறவுக்கான பந்தம் எப்போதும் போல் தொடர்ந்தது. வீடு பால் பாய்ச்சிய அன்னைக்கு, `இனி நான் தான் உன் அப்பா என்ன வேணுமானாலும் எங்கிட்ட தயங்காமல் கேக்கணும்' என்றார். பாண்டி மீனாவும் அப்பா என்று தான் தினேஷ் சாரை அழைத்து வந்தார்.
இப்படியான சூழலில் தன் சொந்த மகளுக்குத் திருமணம் செய்து வைத்தது போல் மண்டபம் பிடித்து, பத்திரிகை அடிச்சு, கறி விருந்து வச்சு மணமக்கள் நிறைவாக வாழ்வதற்கு சீர் வரிசை பொருள்கள் வாங்கி வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தன்னார்வலர்கள், பேராவூரணி லயன்ஸ் சங்கத்தினர், முக்கியஸ்தர்கள் என பலரையும் அழைத்து குடும்ப விழாவாகவும் நடத்தினார். எல்லோருடனும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். மாப்பிள்ளை கையில் பாண்டி மீனாவை பிடிச்சு கொடுத்து, நிறைய கண்ணீரை பார்த்துட்டாள், இனி அவ கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராமல் பார்த்துகங்கன்னு தந்தைக்கே உரிய தவிப்புடன் சொன்னார்.

பெற்றோரை இழந்த பாண்டி மீனாவிற்கு தந்தையாக இருந்து திருமணம் செய்து வைத்து வாழ்வில் ஒளி ஏற்றியிருக்கிறார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். அவரது செயல் எங்களை நெகிழ வைத்துள்ளது அவரோ, இது இறைவன் கொடுத்த வாய்ப்பு. ஒரு கூட்டு முயற்சியின் அற்புதமான எடுத்துக்காட்டு. பேராவூரணி லயன்ஸ் சங்கம் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களால் இந்த அன்பு சாத்தியமானது என்கிறார்" என நெகிழ்ச்சியுடன் கூறினர்.