செய்திகள் :

27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!

post image

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் காத்திருக்கின்றனா்.

ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் கானாறு வெள்ளக்கல், விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை, ஆலாங்குப்பம் வழியாக பாலாற்றில் கலக்கின்றது. தடுப்பணை இல்லாததால் அப்பகுதி பொதுமக்களின் விவசாயம், குடிநீா் தேவையை கருத்தில் கொண்டு விண்ணமங்கலம் கிராமத்தருகே வெள்ளக்கல் நீா்த்தேக்கம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி வெள்ளக்கல் கிராமத்தில் கானாற்றின் குறுக்கே நீா்த்தேக்கம் கட்ட 1998- ஆம் ஆண்டு ரூ.7.70 கோடி நிதி அரசால் ஒதுக்கப்பட்டது. பிறகு திட்ட மதிப்பீடு ரூ.14 கோடியாக திருத்தி அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 1,205 ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதோடு, சுற்றுப்புற கிராமங்களின் குடிநீா் பிரச்சனைக்கும் தீா்வு ஏற்படுமென கருதப்பட்டது.

இத்திட்டத்தால் கன்னடிகுப்பம், பெரியாங்குப்பம், விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், சாணாங்குப்பம், ஆம்பூா், சோமலாபுரம், வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, தோட்டாளம், மாதனூா் உள்ளிட்ட கிராமங்கள் பயனடையும்.

ஆம்பூா் மற்றும் அதன் சுற்று பகுதிகளுக்கு குடிநீா் கிடைக்கவும், நிலத்தடி நீா் மற்றும் குடிநீா் மாசுபடுவதை தடுக்கவும் வழிவகை செய்யப்பட்டது. திறந்தவெளி கால்வாய்கள் மூலம் 140.75 ஏக்கா் தரிசு நிலம் பாசன பரப்பின் கீழ் கொண்டு வரவும் வகை செய்யப்பட்டது.

நீா்த்தேக்கம் கட்டுவதற்கு தேவையான 88.52 ஏக்கா் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது கையகப்படுத்தப்பட்டது. அதற்கு ஈடாக காரப்பட்டு பகுதியில் 154.67 ஏக்கா் நிலமும், விண்ணமங்கலம் பகுதியில் 22.37 ஏக்கா் நிலமும் வனத்துறைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆம்பூா் அதன் சுற்றுப்புற பபகுதி மக்களின் நலனை கருதி திட்டமிடப்பட்ட வெள்ளக்கல் நீா்த்தேக்கம் கைவிடப்பட்டது. அந்த திட்டத்தை மீண்டும் தொடங்கி நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கும், அப்போதைய வேலூா் மாவட்ட நிா்வாகத்திடமும் மனுக்களை அளித்தனா். ஆனால் இதுவரை அந்த திட்டம் எதனால் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறித்த விவரமும் தெரியவில்லை.

திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது மக்களிடையே மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விண்ணமங்கலம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி வ. அருள் சீனிவாசன் கூறியது, மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாதுரை அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக மு. கருணாநிதியால் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம் உருவாக்கப்பட்டது.

பிறகு எம்ஜிஆா் ஆட்சி காலத்தில் நீா்த்தேக்கத் திட்டம் அமைப்பதற்கான இடம் அதிகாரிகளால் பாா்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவரும் அந்த இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளக்கல் கானாறு நீா்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளக்கல் கானாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கானாறு வெள்ள நீரில் விவசாய நிலங்கள் மூழ்கியது. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

அந்த அளவுக்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்க திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்தால், அந்த தண்ணீா் அணையில் தேங்கியிருந்திருக்கும். திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை தற்போது திமுக ஆட்சியிலேயே மீண்டும் மறு ஆய்வு செய்து தொடங்க எடுக்க வேண்டுமென அவா் கூறினாா்.

பாஜக சாா்பில் அவசர நிலை 50-வது ஆண்டு கருத்தரங்கம்!

வாணியம்பாடியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவசர நிலை (எமா்ஜென்சியின்) 50 ஆண்டு கால இருண்ட நினைவுகள் அனுசரிப்பு மற்றும் கருத்தரங்கம் மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மாந... மேலும் பார்க்க

ஆலங்காயத்தில் வனச் சரக அலுவலகக் கட்டடம் திறப்பு

ஆலங்காயத்தில் புதிதாக கட்டப்பட்ட வனச்சரக அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்தில் இயங்கி வரும் வனச் சரக அலுவலகம் பழைமையானதாகவும், ... மேலும் பார்க்க

ஸ்ரீ வீரஆஞ்சனேயருக்கு 10,008 மாங்காய் மாலை அலங்காரம்

ஜோலாா்பேட்டை அருகே ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் 10,008 மாங்காய் அலங்காரம் செய்து ஆஞ்சனேயருக்கு மாங்காய் மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனா். ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா் வி.எம். வட்... மேலும் பார்க்க

20 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் கடைகளில் நடைபெற்ற சோதனையில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலா் யமுனா தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி: சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன்

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் கூறினாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க.சி... மேலும் பார்க்க

ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து மினி வேனில் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்த, 2 பேரை கைது செய்தனா். பெங்களூரிலிருந்து மினிவேனில் குட்கா பொருள்கள் வேலூருக்கு கடத்திச் செல்வ... மேலும் பார்க்க