ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்!
Kerala: `கருவிகள் இல்லாமல் அறுவை சிகிச்சை முடக்கம்' - மருத்துவர் குற்றச்சாட்டு; அரசின் பதில் என்ன?
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் செய்யமுடியாமல் முடங்கி உள்ளதாக சிறுநீரகத்துறை தலைமை மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறிது சிறுநீரகத்துறைத் தலைவர் டாக்டர் ஹாரிஸ் நேற்று முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், "மருத்துவ உபகரணங்கள் இல்லை என அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விண்ணப்பம் கொடுத்தும் பயன் இல்லை. அலுவலகங்களில் ஏறி இறங்கியதால் செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம். உபகரணங்கள் இல்லாததால் தொடர்ச்சியாக அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டது" என கூறியிருந்தார்.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் தங்களால் எதுவும் செய்ய முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் நோயாளிகளும், அவர்களுடன் இருக்கும் உறவினர்களும் அல்லாடிய நிலையில் இந்த பதிவை மருத்துவத்துறைத் தலைவர் வெளியிட்டதாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து விவாதம் எழுந்ததை அடுத்து மருத்துவர் ஹாரிஸ் அந்த பதிவுகளை நீக்கினார். மேலும் டாக்டர் ஹாரிஸ் கூறுகையில், "அரசியல் ரீதியாக பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என நான் அந்த பதிவை போடவில்லை. இதுகுறித்து நான் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். சுகாதாரத்துறை அமைச்சருக்கு இதுபற்றி தெரியுமா என்பது பற்றி தெரியவில்லை. அனைத்து துறைகளிலும் இதுபோன்ற பிரச்னை உள்ளன. பயம் காரணமாக பலரும் அதை வெளியே கூறுவது இல்லை. உபகரணங்களை நோயாளிகள் சொந்த செலவில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களில் உறுதியாக உள்ளேன். என்னை வேலையில் இருந்து நீக்கினாலும் கவலை இல்லை. எனக்கு சர்வீஸ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதுகுறித்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த சில மருத்துவர்கள் கூறுகையில், "உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மூன்று அறுவை சிகிச்சைகள் முடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை தனது மகனது வயதை ஒத்த இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது. ஆனால் உபகரணம் இல்லாமல் அந்த அறுவை சிகிச்சை முடங்கியதால், அந்த ஆதங்கத்தை டாக்டர் ஹாரீஸ் முகநூலில் பதிவிட்டார். 41,000 ரூபாய் விலையுள்ள அந்த உபகரணம் வாங்குவதற்காக ஹாஸ்பிட்டல் டெவலப்மென்ட் சொசைட்டி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை அடுத்து பலமுறை அந்த அலுவலகத்திற்கு அவர் சென்றுள்ளார். ஆனால் சில விதிமுறை சிக்கல்களை கூறி அந்த உபகரணங்கள் வாங்கப்படாமல் இருந்தது. இதை அடுத்து அவர் சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதை தொடர்ந்தே டாக்டர் ஹாரிஸ் அவ்வாறு பதிவிட்டு இருந்தார்" என்றனர்.

டாக்டர் ஹாரிசின் குற்றச்சாட்டுகள் தவறானது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவர் ஹாரிசிடம் மருத்துவ கல்வி இயக்குநர் விளக்கம் கேட்டுள்ளார். மேலும், டாக்டர் ஹாரீஸ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகம். மேலும், உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்,"மருத்துவர் வெளியிட்டிருந்த தகவல் சாதாரண விஷயம் அல்ல. பின்னடைவுகள் தவறுகள் நடந்திருந்தால், நடந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
கடந்த மே மாதம் மட்டும் சிறுநீரகப்பிரிவில் 312 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை 3 ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன. நான்காவது அறுவை சிகிச்சை முடங்கியது. இது எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. மாநில அரசை பொறுத்தவரை ஒவ்வொரு மனிதர்களும் முக்கியமானவர்கள். எனவே தேவையான நடவடிகள் எடுக்கப்படும். எனக்கு கிடைத்த விவரங்களின் அடிப்படையில் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளேன். இத இந்த விவரங்களை அடிஷனல் சீஃப் செகரட்டரி-க்கு ரிப்போர்ட் செய்யப்படவில்லை என்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றார்.