வங்கதேசம்: பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இரு மதத்தினரிடையே மோதல்!
வங்கதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால், இரு மதத்தினரிடையே மோதல் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ராமச்சந்திரபூர் பச்கிட்டா கிராமத்தில், ஜூன் 26 ஆம் தேதியில் 21 வயது (இந்து) பெண்ணை வங்கதேச தேசியவாதக் கட்சியின் உள்ளூர் தலைவர் (BNP) ஃபசோர் அலி (38) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் துபையில் பணிபுரியும் நிலையில், உள்ளூர் திருவிழாவுக்காக தனது தந்தையின் வீட்டில் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில்தான், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் பெண்ணின் வீட்டுக்குள் நுழைய முயன்ற அலியை, பெண் தாக்கிவிட்டு, வீட்டின் கதவையும் மூடியுள்ளார்.
இருப்பினும், வீட்டினுள் சென்ற அலி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியோடியுள்ளார். சம்பவத்தின்போது, அலியை சிறைப்பிடித்த அப்பகுதி மக்கள், அலியை தாக்கியுள்ளனர். இருப்பினும், அவர்களிடமிருந்தும் அலி தப்பியோடி விட்டார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அலியை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (ஜூன் 29) காலை 5 மணியளவில் சைதாபாத் பகுதியில் அலி உள்பட 5 பேரையும், சம்பவம் தொடர்பான விடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவமானது, வங்கதேசத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து, இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.