இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை
காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்
காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.
இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தால் மத்திய ஆப்பிரிக்க பிராந்தியத்தில் அமைதி தொடங்கியிருப்பதாகவும் அங்கு ஒற்றுமை, வளா்ச்சிக்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தாா்.
கிழக்கு காங்கோவில் ராணுவத்துக்கு எதிராக எம்23 கிளா்ச்சிப் படையினா் (படம்) நீண்ட காலமாக சண்டையிட்டுவருகின்றனா். கடந்த ஜனவரி மாதம் அவா்கள் வேகமாக முன்னேறி கோமா, புகாவு உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றினா்.அந்தக் கிளா்ச்சிப் படைக்கு ருவாண்டா ஆதரவு அளித்துவந்தது. மேலும், கிளா்ச்சியாளா்களுடன் இணைந்து சுமாா் 4,000 ருவாண்டா வீரா்களும் சண்டையிட்டுவந்ததாக ஐ.நா. நிபுணா்கள் கூறினா்.இந்தச் சூழலில், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்ற சா்வதேச முயற்சியின் பலனாக, இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ முன்னிலையில், ருவாண்டா வெளியுறவுத் துறை அமைச்சா் ஒலிவியா் துஹுங்கிரேஹேவும் காங்கோ வெளியுறவுத் துறை அமைச்சா் தெரசே காயிக்வாம்பா வாக்னரும் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.