அதிமுகவிற்கு பாஜக சுமையா? - சீமான் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில்
" எனக்கும் ராமதாஸ் ஆதரவாளர்கள் உயிருக்கும் ஆபத்து உள்ளது" - பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி
சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று நடந்த பாமக கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், "ஐயா ஐயாவாக இல்லை குழந்தை போல் மாறிவிட்டார். மூன்று தீய சக்திகள் அவரை ஆட்டி வைக்கிறார்கள் எனவும், கொலைகாரன், கொள்ளைக்காரன், எலந்த பழம் விற்பவனுக்கு எல்லாம் பதவிகளை வழங்கி வருகிறார்" என ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த நிலையில் அவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாஸ் தலைமையிலான பாமகவின் இணை பொதுச்செயலாளர் அருள் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "ராமதாசை, அன்புமணி விமர்சிப்பது வேதனையாக உள்ளது.
ராமதாசுடன் இருப்பவர்களை இணையத்தில் விமர்சிக்க ஒரு கும்பலே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி நல்ல தலைவர்தான். ஆனால் அவரை தீய சக்திகள் தவறான பாதையில் வழி நடத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும், ஐந்து ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை குழந்தையாக மாறிவிட்டார் என்று அன்புமணி சொல்கிறாரே இந்த குழந்தைதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரை தலைவராக்கியது அப்படியானால் அந்த குழந்தை உங்களை தலைவராக்கியது மட்டும் எப்படி செல்லும் என கேள்வி எழுப்பினார்.
10 நாட்களுக்கு சேலம் கார்த்தி போன்ற ஆட்கள் சொல்வதைக் கேட்காமல் தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து பேசி சமாதானம் ஆகுங்கள். 2026லும் நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர், பாமகவின் அடுத்த தலைவரும் அன்புமணிதான் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். சிலரின் பேச்சைக் கேட்டு ராமதாசிடமிருந்து கட்சியை பிடுங்கி விடலாம் என்று எண்ணாமல் அவரே உங்களை தலைவர் என்று சொல்லும் வரை காத்திருங்கள் என்று வலியுறுத்தினார். மேலும் அன்புமணி கட்சியை வழி நடத்திய போது பாமக தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் இந்த முறை தேர்தலில் ராமதாஸ் கட்சியை வழிநடத்தட்டும் வாக்காளர்கள் அனைவரும் ராமதாஸின் பின்னால்தான் உள்ளனர். அன்புமணி சொன்னால் அவர்கள் ஓட்டு போடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.
அன்புமணியை எதிர்த்து சேலத்தில்தான் அரசியல் செய்யப்படுவதாகவும், விரைவில் அவற்றை களை எடுப்போம் என்று அன்புமணி கூறியுள்ளதால் தன் உயிருக்கும் தன்னைப் போன்று ராமதாசை ஆதரிக்கும் அனைவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, ராமதாஸ் - அன்புமணி இணைந்து 2026 தேர்தலை சந்திக்கும்போது, சேலம் மேற்கு தொகுதியில் அன்புமணி போட்டியிட்டால், அவருக்காக முதல் நாளாக களத்தில் நின்று வெற்றி வெற்றி பெற செய்வேன் என்று தெரிவித்தார்.