இந்தியாவில் அனைத்து கட்சியிலும் பெண் வன்கொடுமை, பாகுபாடு; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் கடந்த வாரம் முதலாம் ஆண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் கொல்கத்தா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இக்காரியத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்த மனோஜித் மிஸ்ரா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனோஜித் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பா.ஜ.கவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.மதன் மித்ரா அளித்துள்ள பேட்டியில்,''பாதிக்கப்பட்ட பெண் ஏன் அங்கு தனியாக செல்லவேண்டும்.

அவர் செல்லாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்காது''என்று தெரிவித்திருந்தார். இதே போன்று மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யான் பானர்ஜி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அளித்த பேட்டியில்,''ஒரு நண்பர் தனது நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்ய முடியும்? பள்ளிகளில் போலீசார் இருப்பார்களா? இது மாணவர்களால் மற்றொரு மாணவிக்கு செய்யப்பட்டது. அவரை (பாதிக்கப்பட்ட மாணவி) யார் பாதுகாப்பார்கள்? இந்தக் குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அனைத்தையும் யார் செய்கிறார்கள்? சில ஆண்கள் இதைச் செய்கிறார்கள். எனவே, பெண்கள் யாருக்கு எதிராகப் போராட வேண்டும்? இந்த வக்கிரமான ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் போராட வேண்டும்.
ஒரு நண்பர் ஒரு நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால், அது எப்படி ஊழலாக இருக்க முடியும்? பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் நிலை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆண்களின் மனநிலை இப்படி இருக்கும் வரை, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்," என்று அவர் மேலும் கூறினார். இத்தலைவர்கள் பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து அக்கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா அளித்துள்ள பேட்டியில்,'' இந்தியாவில் அனைத்து கட்சிகளிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலின பாகுபாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் இதில் மாறுபட்டது. பெண்களுக்கு எதிராக பேசும் தலைவர்களை திரிணாமுல் காங்கிரஸ் கண்டிக்கும்''என்று குறிப்பிட்டுள்ளார்.