பெண் வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது
செய்யாறு அருகே பீப் பக்கோடா கடனாக தர மறுத்த பெண் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ராகினி (38). இவா், செங்காடு கிராமத்தில் பீப் பக்கோடா கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். ராகினி கடந்த 23-ஆம் தேதி மாலை அவரது கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த அஜய் (25) பீப் பக்கோடாவை கடனாகக் கேட்டாராம். ராகினி கடன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜய், அங்கிருந்த செங்கல்லை எடுத்து ராகினி மீது தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், அனக்காவூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிவு செய்து, அஜயை கைது செய்தாா்.