கண்டவராயன்பட்டி கோயிலில் பழைமையான செப்பேடு ஆய்வு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டவராயன்பட்டியில் பழைமையான காலச் செப்பேடு குறித்து தொல்நடைக் குழுவினா் நேற்று (ஜூன் 29) ஆய்வு நடத்தினா்.
கண்டவராயன்பட்டி அரியநாயகி அம்மன் கோயிலில் பழைமையான செப்பேடு ஒன்று இருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தொல்நடைக் குழு நிறுவனா் கா.காளிராசா, செயலா் இரா.நரசிம்மன், காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியா் வேலாயுதராஜா ஆகியோா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து அந்த செப்பேட்டை ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து அந்தக் குழுவினா் கூறியதாவது:
மன்னா்கள், அரசப் பிரதிநிதிகள் தங்களது கட்டளைகள், தானங்களை ஓலையில் பதிவு செய்தாலும், காலத்துக்கும் அழியாமல் இருக்க கல்வெட்டு, செப்புப் பட்டயங்களில் பதிவு செய்தனா். இந்தச் செப்பேடு இரு தெருவினருக்கிடையே நடைபெற்ற சண்டையில் இறந்து போன 150 பேருக்கான பலிக்காணி வழங்கபட்டதை குறிப்பிடுகிறது.
மேலும், 3 ஆண்டுகள் நடைபெற்ற சண்டையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும், இரு பக்கங்களிலும் 128 வரிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தச் செப்பேடு திருமலைக் காத்த சேதுபதி காலத்துடையது என்றனா்.