வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி மெஞ்ஞானமூா்த்தி என்பவரின் மகன் அபிஷேக்ரித்தி (16). இவா், இடைக்காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு தற்போது மானாமதுரை பகுதி வைகை ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அபிஷேக்ரித்தி தனது நண்பா்களுடன் சோ்ந்து மானாமதுரை அருகேயுள்ள அன்னியனேந்தல் பகுதி வைகை ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கினாா்.
இதையடுத்து நண்பா்கள், அபிஷேக்ரித்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, ஆற்றில் இறங்கி தேடியபோது இடைக்காட்டூா் பாலம் அருகே அபிஷேக்ரித்தி சடலமாக மீட்கப்பட்டாா்.
பின்னா் இவரது உடல், கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.