உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி
திருச்செந்தூர்: அறுபடை ஓவியம், தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை.. குடமுழுக்கு பணிகள் தீவிரம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை, 7 -ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
14 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவில் மேற்கு கோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 76 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகள் கடந்த 40 நாள்களாக நடந்து வந்தது.

இந்த யாகசாலையில் பல்வேறு வர்ணங்களில் வர்ணம் பூசுதல், வண்ண பேப்பர் ஒட்டுதல், சித்திரங்கள் வரைதல் என, 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் முருகனின் அறுபடை வீடுகள் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. மேலும் பஞ்சவர்ண வேலைகளில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை முழுவதும் தங்க வர்ணத்தில் மிகவும் தரமான அட்டைகளால் ஒட்டப்பட்டுள்ளது. யாகசாலையின் நடுவே பிரமாண்டமாக 5 அடி உயரத்தில் பஞ்ச ஆசன வேதிகை உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் ஆமை மீது 5 தலை நாகம் அமர்ந்திருப்பது போலும், அதற்கு மேல் முனிவர்கள், நந்தி, சிங்கம், அலங்கார பொம்மைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் தாமரைப்பூ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மேல் யாகசாலை வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்கும் நாளில் மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யும் கலசமும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்த யாகசாலையில் ஆழி, மயில், நந்தி, யானை உள்பட பல்வேறு அலங்கார உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த யாகசாலையை உருவாக்கிய மயிலாடி பகுதியைச் சேர்ந்த கலைஞர்களிடம் பேசினோம், “கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இதே திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு நாங்கள்தான் யாகசாலைகள் அமைத்தோம். அதேபோல் இந்த ஆண்டிற்கும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தமாக 76 குண்டங்கள் அமைத்துள்ளோம். இதில் முருகப் பெருமானுக்கு மட்டும் 49 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அது தவிர ஜெயந்திநாதர் மற்றும் நடராஜருக்கு பஞ்ச குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாள்களுக்கு மேலாக இந்த பணிகளை செய்து வந்தோம். தற்போது இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வந்தோம். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பல்வேறு விஷயங்களை புதிதாக செய்துள்ளோம்.

குறிப்பாக, இங்கு தங்க நிறத்தில் வர்ண பேப்பர் ஒட்டாமல் தரமான நிஜமாகவே தங்க வர்ணத்தில் ஜொலிக்கும் வகையில் உருவாக்கி உள்ளோம். மேலும் பஞ்ச ஆசன வேதிகையையும் உருவாக்கியுள்ளோம். யாகசாலையைச் சுற்றி அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் உருவங்களை வரைந்துள்ளோம். ஆழி, மயில், நந்தி, யானை போன்ற உருவங்களை அலங்காரமாக வைத்துள்ளோம்” என்றனர்.