இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்..! மீண்டும் சதமடித்த பதும் நிசாங்கா!
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: "நல்ல நேரத்தில் நடத்த வேண்டும்" -உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் குடமுழுக்கு காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால், இதற்குப் பதிலாக மதியம் 12.05 முதல் 12.47 மணிக்குள் நடத்த வேண்டும் எனவும், இந்த நேரத்தில் தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது எனவும் அதனால் இந்த நேரத்தில் குடமுழுக்கினை நடத்திட வேண்டும் எனக் கோயில் விதாயகர் தரப்பில் கூறப்பட்டது.

இதனால் திருக்கோயில் நிர்வாகத்திற்கும் விதாயகர்த்தா தரப்பிற்கும் கருத்து வேறுபாடு நிலவியது. நேரத்தை முடிவு செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.
”இந்தாண்டு நீதிமன்ற உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை நியமித்த வல்லுநர் குழு முடிவு செய்த காலை நேரத்திலேயே நடத்தலாம்.
ஆனால், வரும் காலங்களில் திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் விழாக்களின்போது விதாயகர்த்தாவிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற வேண்டும்” என மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதனையடுத்து திட்டமிட்டபடி காலை 6.05 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும் எனத் திருக்கோயில் சார்பில் இணை ஆணையர் ஞானசேகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதே நேரத்தைக் குறிப்பிட்டு அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த சிவராம சுப்பிரமணிய சாஸ்திரிகள் உச்ச நீதிமன்றத்தில் குடமுழுக்கு நேர விவகாரம் தொடர்பாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி, நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ”கடந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில்தான் இவ்வாண்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்னை உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “கடந்த ஆண்டு குடமுழுக்கு நேரத்தைத் திருக்கோயிலின் விதாயகர்த்தா குறித்துக் கொடுத்தார். ஆனால், இந்தாண்டு உயர் நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுதான் நேரத்தைக் குறித்துக் கொடுத்துள்ளது.

அந்தக் குழுவே சட்ட விரோதமானது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விதாயகர்த்தாவிடம் நேரம் குறித்துக் கொடுக்கக் கூறாமல் தன்னிச்சையாக முடிவை எடுத்துள்ளது.
எனவேதான் குடமுழுக்கினை நல்ல நேரமான நண்பகல் நேரத்தில் நடத்த வேண்டும் எனக் கூறுகிறோம்” என்றார்.
ஆனால், அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.