ஜம்மு - காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை! ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக்கொலை!
Reliance: ``என் தந்தை என்னிடம் சொன்னதுதான் என் லட்சியம்" - மனம் திறந்த முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அதன் நிறுவனர்களுக்குப் பிறகும் இருப்பதை உறுதி செய்வதே என் மிகப்பெரிய லட்சியம் என முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ``ரிலையன்ஸ் 2027-ல் 50 வயதை எட்டும், ஆனால் ஒரு நூற்றாண்டு காலம் இந்தியாவுக்கு சேவை செய்வதே எங்கள் இலக்கு. 100 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகும் ரிலையன்ஸ் இந்தியாவிற்கும் மனிதகுலத்திற்கும் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நிச்சயம் நடக்கும் என்று நான் நம்புகிறேன்.

என் தந்தை என்னிடம், ‘ரிலையன்ஸ் ஒரு செயல்முறை. அது நீடிக்க வேண்டிய ஒரு நிறுவனம். ரிலையன்ஸ் உங்களையும் என்னையும் தாண்டி நீடிப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். எனத் தெரிவித்திருக்கிறார். நீங்கள் இந்த உலகத்திற்கு எதுவும் இல்லாமல் வருகிறீர்கள், எதையும் உங்களுடன் எடுத்துச் செல்லவும் முடியாது. ஆனால் உங்களால் உங்களை சில காலம் நினைவுபடுத்தும் ஒரு நிறுவனத்தை விட்டுச் செல்ல முடியும்.
2016-ம் ஆண்டில், மிகவும் போட்டி நிறைந்த தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் 25 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து நுழைந்தது. நாங்கள் பெரும்பகுதி ஆபத்தான முடிவுகளை எடுத்திருக்கிறோம். நாங்கள் எடுத்த ஆபத்தான முடிவுகளில் ஒன்று ஜியோ. அப்போது, நாங்கள் முதலீடு செய்தது எங்கள் சொந்தப் பணம். நான் பெரும்பான்மை பங்குதாரர். ஆனால் நான் என் வாரியத்திடம் ‘மோசமான நிலையில், நாம் அதிக வருமானம் ஈட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால் அது நம் சொந்தப் பணம். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனமாக, இந்தியாவில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறோம் என்றேன். ஆம் நாங்கள் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கியிருக்கிறோம். அதன் மூலம் இந்தியாவை முழுமையாக மாற்றியமைத்திருக்கிறோம். இது சாத்தியமானதற்கு என் அப்பாதான் காரணம். அவர் ஏமனில் ஒரு பெட்ரோல் நிலைய உதவியாளராகப் பணிபுரிந்து,100 டாலரை சேமித்து வைத்தார்.
1960-ல் மும்பைக்கு வந்து, 'நான் சொந்தத் தொழிலை உருவாக்கி, அதை இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பயனுள்ள ஒன்றாக மாற்றுவேன்' என உறுதியாக முடிவெடுத்தார். ஒரு நாற்காலி, ஒரு தொலைபேசி, அந்த 100 டாலர் இதுதான் மூலதனம். அந்த நம்பிக்கைதான் எங்களுக்கு இருக்கும் மனநிலை. எந்தவொரு புதிய வணிகத்தையும் கட்டமைக்கும் போதும் 'இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை என்ன, அதை நாம் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?' என எங்களை நாங்களே கேட்டுக்கொள்வோம்.

அது ரிலையன்ஸின் அடிப்படையாகவே மாறிவிட்டது. இப்போது சூரிய சக்தி, பேட்டரிகள், ஹைட்ரஜன், உயிரி ஆற்றல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றை உருவாக்கி வருகிறோம். இது வரவிருக்கும் காலநிலை நெருக்கடியிலிருந்து பூமியைக் காப்பாற்றுவதற்கான எங்கள் பங்களிப்பு." என்றார்.