லண்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தில் 11 பேருக்கு தலைசுற்றல், குமட்டல்.. என்ன காரணம்?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய மக்கள் அச்சம் அடைய ஆரம்பித்துள்ளனர். அதோடு ஏர் இந்தியா விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவும் வெகுவாக சரிந்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நிர்வாகம் பல வெளிநாட்டு சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்து இருக்கிறது.

தற்போது லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு தலைசுற்றல் மற்றும் குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. பயணிகள் சாப்பிட்ட பிறகு இது போன்ற பிரச்னை ஏற்பட்டது. பயணிகள் மட்டுமல்லாது விமான சிப்பந்திகளுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டது. 5 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகள் இது போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். விமானத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது.
அப்படி ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டால் விமானத்தில் தானாகவே மேல் பகுதியில் இருந்து ஆக்ஸிஜன் முககவசம் வரும். ஆனால் ஏர் இந்தியா விமானத்தில் அது போன்று ஆக்ஸிஜன் முககவசம் வரவில்லை. எனவே ஆக்ஸிஜன் குறைபாடு இல்லை என்று தெரிய வந்தது.
விமான பயணத்தின் பல்வேறு காலக்கட்டத்தில் 5 பயணிகளுக்கு தலைசுற்றல் மற்றும் மற்றும் குமட்டல் ஏற்பட்டது. விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் வரை இரண்டு பயணிகள் மற்றும் இரு விமான சிப்பந்திகளுக்கு இது போன்ற பிரச்னை இருந்து கொண்டே இருந்தது. விமான தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக நின்ற மருத்துவ குழு அவர்களுக்கு தேவையான சிகிச்சையை கொடுத்தது.

இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ''விமானத்தில் பயணிக்களுக்கு ஏற்பட்ட அசெளகரியம் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளது.
விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு காரணமாக இந்நிகழ்வு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாப்பாடுதான் பைலட்களுக்கும் வழங்கப்பட்டது. பைலட்களுக்கு எந்த வித பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்திய விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.