"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறு...
``அரசு கண்டுகொள்ளாதது வேதனை..'' - பதக்கங்களுடன் கரும்புச்சாறு விற்கும் தேசிய தடகள வீரர்
பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஃபாசில்கா நகரிலிருக்கும் சபுவானா கிராமத்தில் வசித்து வருகிறார் தேசிய தடகள வீரர் தீபக். நிதி பற்றாக்குறையாலும் அரசாங்க ஆதரவில்லாமலும் தவித்து வரும் விளையாட்டு வீரர் தீபக், தனது அன்றாட வாழ்வாதாரத்திற்கான பணம் சேர்க்க தெருக்களில் கரும்புச்சாறு விற்று வாழும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
22 வயதான தேசிய தடகள வீரர் தீபக், தனது கரும்புச்சாறு விற்கும் வண்டியை அலங்கரிக்க மாநில அளவிலான தடகள போட்டிகளில் தான் பங்கேற்று வென்ற 16 பதக்கங்களை பயன்படுத்தி அலங்கரித்து வைத்துள்ளார். அந்த வண்டியில்தான் தனது வாழ்வாதாரத்திற்காக தெருக்களில் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகிறார்.

தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி பேசிய அவர், ``விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த நான், அரசு உத்தியோகம் நாடி அத்தனை முயற்சியும் செய்து பார்த்தேன். என்னால் எந்த முயற்சியிலும் வெற்றி பெற இயலவில்லை. என் மனதில் முன்பு இருந்த பொறுமை தற்போது இல்லாமல் போய்விட்டது. விளையாட்டு வீரர்களுக்கு மரியாதைக்குரிய உத்தியோகம் வழங்குவதில் அரசாங்கத்தின் கொள்கைகள் தோல்வியை சந்தித்துவிட்டது என்பதை அம்பலப்படுத்ததான் என் கரும்புச்சாறு வண்டியை இவ்வாறு எனது பதக்கங்களால் அலங்கரித்து வைத்துள்ளேன்" என்றார்.
தனது மகன் தீபக் பற்றி பேசிய அவரது தந்தை சரஞ்சித், ``நான் என் மகனை சிறப்பாக ஊக்குவித்துள்ளேன். பல விளையாட்டு போட்டிகளில் அவர் பங்கேற்று வெற்றி பெற அத்தனை ஊக்கமும் கொடுத்துள்ளேன். ஆனால், என் மகனுக்கென ஒரு உத்தியோகம் வழங்கக்கூட அரசாங்கம் சிறிதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மனதுக்கு மிகுந்த ஏமாற்றம் தருகிறது. நான் நோய்வாய்ப்பட்டு இருப்பதால், எங்கள் குடும்ப செலவிற்காக தீபக்தான் ஏதாவது செய்து உழைக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது.

என் மகன் தீபக், விளையாட்டு துறையில் பல சாதனைகளை சாத்தியமாக்கியவர். மார்ச் 2022-ல் நாகாலாந்தில் நடைபெற்ற 56-வது தேசிய கிராஸ் கண்ட்ரி தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட என் மகன், 20 வயதுக்குட்பட்ட சிறுவருக்கான 8 கிமீ ஓட்டப்பந்தயத்தில் ஓடி இரண்டாம் இடம்பிடித்தார். ஜூன் 2023-ல் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற 66-வது தேசிய பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 6 கி.மீ கிராஸ் கண்ட்ரி ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசை வென்றார். 'பஞ்சாப் தடகள சங்கம்' நடத்திய மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தீபக் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
2022-ல் சங்ரூரில் நடைபெற்ற 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றியை தன் வசமாக்கினார். மேலும், 2024-ல் சங்ரூரில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான 8 கிமீ ஓட்டப்பந்தயம், 2022-ல் சங்ரூரில் நடைபெற்ற 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 2021-ல் மொஹாலியில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 6 கிமீ கிராஸ் கண்ட்ரி ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் பங்கேற்று தீபக் முதலிடம் பிடித்து வெற்றியை தனதாக்கி உள்ளார்.

இவ்வளவு திறமைகள் மிகுந்த எனது மகன் மீதான என்னுடைய நம்பிக்கையை இப்போதும் நான் இழக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் விளையாட்டு கலாச்சாரத்தை மீட்டெடுக்க முதல்வர் பகவந்த் மான் சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆனால், எங்களுக்கு மாநில அரசிடமிருந்து இன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. அப்படி முதல்வரின் உதவி கிடைத்தால், என் மகன் 'தீபக்' கரும்புச்சாறு விற்க வேண்டிய கட்டாயம் இருக்காது" என அவர் மனதின் குரலை தெரிவித்தார்.