"ராமர் பிறந்த மண்ணிலேயே வென்றது பாஜக அல்ல... இந்தியா கூட்டணி!" - அமைச்சர் ரகுபதி காட்டம்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, "இங்கு உள்ள எல்லோரும் இந்துக்கள் தான். இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். ஆனால், இங்கு தேவை சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு தான், எந்த இந்துக்களை இங்கு வாழவிடவில்லை என்று பவன் கல்யாண் சொல்ல வேண்டும். ஆந்திராவில் வேண்டுமானால் அது போல் பிரச்னை இருக்கலாம். தமிழ்நாட்டில் அது போன்ற பிரச்னைகள் இல்லை. இன்று அவர்களையும் முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட மாடல் அரசின் சாதனை.
முருகவேசம் போட்டிருக்க முடியாது
நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரானவர்களாக இருப்போமேயானால் இவர்கள் இன்று முருகவேசம் போட்டிருக்க முடியாது. ஆன்மிகம் இங்கு தலைத்திருக்கிறது என்ற காரணத்தினால் தான் தமிழ் கடவுள் முருகனை தமிழர்களின் இதயத்தில் ஏந்தி உள்ளார்கள் என்ற காரணத்தினால் தான் தமிழர்களுக்கு யார் வேஷம் போடுகிறார்கள். யார் உண்மையானவர்கள் என்பது தமிழக வாக்காளர்களுக்கு நன்றாக தெரியும். இந்த வேடதாரிகளை அவர்கள் நம்ப மாட்டார்கள்.

பவன் கல்யாண் ஆந்திராவை போய் பார்க்கட்டும். தமிழ்நாட்டில் பவன் கல்யாண் தனது சித்து வேலையெல்லாம் காண்பிக்க முடியாது. அதற்கு தகுந்த இடம் இது அல்ல. அங்கு வெங்கடாஜலபதியை சொல்வார்கள். இங்கு வந்து புதுசாக முருகன் கோசம் போட்டு உள்ளார். பவன் கல்யாண் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல.
அண்ணாமலைக்கு தெரிந்த வசனங்களை பேசி உள்ளார். சாட்டை அடி சவுக்கடி இது எல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்த வசனம். வசனங்களைத்தான் அண்ணாமலை அந்த மாநாட்டில் உச்சரித்துள்ளாரே தவிர, தமிழக மக்களின் மனநிலையை அவர் உச்சரிக்கவில்லை.
அயோத்தியில் என்ன ஆச்சு?. அங்கு இந்தியா கூட்டணியில் தான் வெற்றி பெற்றது. உத்திரபிரதேசம் என்ன ஆச்சு?. ராமர் பிறந்த மண்ணிலேயே வென்றது இந்தியா கூட்டணி. பா.ஜ.க அல்ல. வரும் 2026- ம் வருட தேர்தலுக்கும், நேற்று நடந்த கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டு வாக்காளர்கள் இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும், கிருத்தவர்களாக இருந்தாலும், பௌத்தர்களாக இருந்தாலும் தங்கள் மனசாட்சியை அவர்களுக்கு நன்றாக தெரியும். யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு, யார் தமிழ்நாட்டை ஆண்டால் அமைதியாக இருக்கும், யாரிடத்தில் அதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை உணர்ந்து தமிழகத்தின் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்.
இவர்களின் போலி வேடம் எடுபடாது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையை இருக்கக்கூடாது என்று கூறும் பைத்தியக்காரத்தனத்தை போல் வேறு எதுவும் கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை என்று ஒன்று இருப்பதால்தான் இன்று ஆலயங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் திருப்பணி செய்திருக்கின்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சி.

வெட்கக்கேடான விஷயம்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முருகன் மாநாட்டில் பங்கேற்றது வெட்கக்கேடான விஷயம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்துக் கொள்வதற்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர். திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லித்தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் கட்சி பெயரிலேயே திராவிடம் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி தூக்கத்தில் இருப்பதால் மறந்துவிட்டார். மற்றவர்களும் மறந்துவிட்டு பா.ஜ.க-வின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கிடைத்துள்ள அருமையான அடிமைகள் அவர்கள். திருநீறும், உத்திராட்சமும் அணிந்து பள்ளிக்கு செல்வதை அவர்களது மாநிலத்திற்கு சென்று நடைமுறைப்படுத்தி காட்டட்டும். இங்கு நாங்கள் எந்தவித மத கலாசாரத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். அனைத்து மாணவர்களும் ஒன்றுதான். அவர்கள் அண்ணன் தம்பிகளாக தான் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கிறார்கள்.
அடித்து விரட்டப்படுவார்கள்
அனைத்து மாநிலங்களிலும் கலாட்டாவை உருவாக்கி அங்கு பயங்கரவாதத்தை உருவாக்கி சண்டை சச்சரவை உருவாக்கி சந்தடி சாக்கில் நுழைந்தார்கள். அப்படி, பா.ஜ.க-வினர் தமிழ்நாட்டில் நுழைவதற்கு திராவிட மாடல் அரசு எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள். தமிழ் கடவுள் முருகனை பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஐகான் செய்து எங்கு கொண்டு போவார்கள். தமிழ்நாட்டை விட்டு முருகனை எங்கும் கொண்டு செல்ல முடியாது. வேறு மாநிலங்களில் முருகன் கோஷம் போட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கோஷம் இருக்கிறது.

கேரளாவில் ஐயப்பனுக்கும், ஆந்திராவில் வெங்கடசலபதிக்கும், மைசூரில் சாமுண்டீஸ்வரிக்கும் தான் கோஷம் போட முடியும். அதனால், முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச் செல்ல முடியாது. அவர் நம்மிடம் தான் இருப்பார். நம்மோடு தான் இருப்பார். வந்திருக்கின்ற மக்களை அரசியலுக்காக இழுக்க வேண்டும் என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது, முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பு என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும், துணிச்சலோடு செய்யக்கூடிய தைரியம் ஒன்றிய அரசு தங்கள் கையில் இருக்கிறது என்ற காரணத்தினால் இதுபோன்று செயல்பட்டுள்ளனர். நீதித்துறை இன்று இந்தியாவில் சுதந்திரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை பல சம்பவங்கள் சுட்டிக்காட்டி உள்ளது. இதிலும் நீதித்துறை நடுநிலைமையோடு செயல்பட்டு யார் யார் எல்லாம் அரசியல் தீர்மானங்கள் கொண்டு வந்தார்களோ அவர்கள் மீது தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதித்துறை எடுக்கும்.
தேர்தலின் போது அவர் அவர்கள் கோரிக்கையை சொல்வது இயற்கை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்று கூறிவிட்டு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்கும் போது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறியது அடிபட்டுவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் தான் மக்களை சந்திக்க முடியும். கூடுதல் இடம் வாங்கி மக்களை சந்திக்க வேண்டும் என்று கூறினால் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு உள்ளதால் தான் அவர்கள் கூடுதல் சீட்டு கேட்க வருகிறார்கள்.

மனம் இருக்கிறது; ஆனால், இடமில்லை!
அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் எல்லாம் நினைத்து கொண்டு தமிழிசை சௌந்தர்ராஜன் ட்ரிபிள் இஞ்சின் சர்க்கார் அமையும் என்று கூறினாரோ என்று தெரியவில்லை. அல்லது அவர் சி டீமை இணைத்து சொல்லி இருக்காரோ என்றும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கிள் இன்ஜின் சர்கார் தான். அந்த இன்ஜினை இயக்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான். மற்றவர்கள் எங்களோடு தோழமையோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியினரும் அவர்கள் கோரிக்கை வைத்து கூடுதல் சீட்டுகளை கேட்பது இயற்கை. தேர்தல் நேரத்தில் அனைவரையும் அழைத்து உட்கார்ந்து பேசி ஒரு நிலைப்பாட்டை கொண்டு வருவது இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நியாயமாக செயல்பட்டு கூட்டணியை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வார். 2026-ல் எங்கள் கூட்டணி தான் வெல்லும். புதிய கட்சிகளை சேர்ப்பதற்கு மனம் இருக்கிறது. ஆனால், இடமில்லை. யாரை விட்டு விட்டு யாரை சேர்ப்பது?. நிச்சயமாக இடம் இருந்தால் புதியவர்களையும் கூட்டணிக்குள் சேர்ப்பார் தமிழ்நாடு முதலமைச்சர். அந்த உரிமை அவருக்கு தான் உண்டு.
எந்த குவாரி உரிமையாளர்களையும் கட்டாயப்படுத்தி வசூல் செய்யவில்லை. அப்படி, புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றோம். ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி தான் நிலவரி எல்லாம் போடப்பட்டுள்ளதை தவிர, வேறு எந்த கட்டணமும் கூடுதலாக யாரிடமும் வசூலிக்கவில்லை. உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை திறப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில், சுற்றுச்சூழல் அனுமதி பெற்று சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும். எந்த காலத்திலும் இவ்வளவு சீக்கிரமாக கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்ததில்லை. தற்போது, சீக்கிரமாக கடைமடைக்கு காவிரி நீரை கொண்டு வந்துள்ளோம். குறுவை சாகுபடியை விவசாயிகள் பாதுகாப்பதை விட நாங்கள் அதிகமாக முயற்சி செய்வோம். நெல் உற்பத்தி அதிகமாக இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக உணவு உண்ண முடியும். உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு விவசாயிகளுக்கு இருக்கக்கூடிய அதே அக்கறை அரசுக்குன் உண்டு. அதைவிட கூடுதல் அக்கறையும் அரசுக்கு உண்டு" என்றார்.