இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 24 | Astrology | Bharathi Sridhar | ...
ஈரான் போரால் பாஸ்மதி அரிசிக்கு வந்த சோதனை!
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரின் காரணமாக ஈரானுக்கு ஏற்றுமதியாக வேண்டிய ஒரு லட்சம் டன் பாஸ்மதி அரிசி துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளன.
இந்தியாவில் உற்பத்தியாகும் பாஸ்மதி அரிசியில் 18% - 20% ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அங்கு நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக அவை இந்திய துறைமுகங்களில் ஏற்றுமதியாகாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செளதி அரேபியாவுக்குப் பிறகு ஈரானுக்கே அதிக அளவிலான அரிசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2024 - 2025 நிதியாண்டின் மார்ச் இறுதியில் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஏற்றுமதியான அரிசியின் மதிப்பு 1 பில்லியன் டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில் தற்போது நிலவும் பதற்றமான சூழல் காரணமாக கடல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. இதனால், அங்கு செல்ல வேண்டிய ஒரு லட்சம் டன் மதிப்பிலான பாஸ்மதி அரிசி பல்வேறு துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளன.
இது குறித்து இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சதீஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவில் மொத்த அரிசி உற்பத்தியில் 18 முதல் 20% ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது, அரிசி விவசாயத்தில் குறிப்பிடத்தகுந்த வணிக ஒத்துழைப்பாகும்.
குஜராத்தின் காந்த்லா மற்றும் முந்த்ரா துறைமுகங்களில் ஈரானுக்குச் செல்ல வேண்டிய சரக்கு தேங்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக கப்பல்களுக்கான காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை.
நிலையான கப்பல் காப்பீட்டுக் கொள்கைகள் சர்வதேச போர்ச் சூழல்களுக்கு அப்பாற்பட்டு உள்ளதால், ஏற்றுமதி சரக்குகள் உடைய கப்பல் புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதியில் நிலவும் தாமதம் மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை போன்றவை நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஏற்கெனவே இந்தியாவில் பாஸ்மதி அரிசியின் விலை ரூ. 4 - ரூ. 5 குறைந்துள்ளது.
2024 - 2025 நிதியாண்டில் மட்டும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு 6 மில்லியன் டன் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவுக்கான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி அதிகரித்திருந்தது.
ஏற்றுமதியில் தாமதம் ஏற்பட, ஈரானில் நிலவும் போர்ப் பதற்றத்தால் கரன்ஸி மதிப்பு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும் என்ற அபாயமும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?