”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் ...
உத்தரகாண்ட்: மலையிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பஸ்; 10 பேர் மாயம், 3 பேர் உயிரிழப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையில் ஏராளமான கோயில்கள் இருக்கிறது. இக்கோயில்களுக்கு தினமும் வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். மலைப்பாதை மிகவும் குறுகலாகவும், வளைவுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் இச்சாலையில் செல்வது மிகவும் அபாயகரமான ஒன்றாகும். இன்று ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரிலிருந்து 18 பயணிகளுடன் பஸ் ஒன்று உத்தரகாண்டில் உள்ள சர்தாம் யாத்திரைக்குச் சென்று கொண்டிருந்தது. பஸ் மலை உயரத்தில் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ருத்ரபிரயக் என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கீழே பள்ளத்தில் விழுந்தது. கீழே சென்று கொண்டிருந்த அலக்நந்தா ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸாரும், பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர 10 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக பேரிடர் மீட்பு படை அதிகாரி வினோத் குமார் தெரிவித்தார். பஸ்சில் நடத்துனர், ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் இருந்தனர். காயம் அடைந்தவர்களில் 9 வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்கும். பத்ரினாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நடந்த இந்த விபத்தில் சிக்கிய பஸ்சில் மகாராஷ்டிராவை சேர்ந்த இரண்டு பேரும், ராஜஸ்தானை சேர்ந்த 7 பேரும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பேரும், குஜராத்தை சேர்ந்த 7 பேரும் இருந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் ரிஷிகேசில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
18 சீட் கொண்ட டெம்போ டிராவலர் பஸ் அலக்நந்தா ஆற்றில் விழுந்து விட்டதாகவும், மீட்பு பணியில் நிர்வாகமும், போலீஸாரும், பேரிடர் மீட்புப் படையும் ஈடுபட்டுள்ளதாக கர்வால் டிவிஷனல் கமிஷனர் வினய் சங்கர் தெரிவித்தார்.