செய்திகள் :

தமிழ் கடவுள் முருகனும் பழமையான கோயில்களும்! - நிறைவான பயண அனுபவம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான் என்று ஒவ்வையார் பாடல் ஒன்று உண்டு. ஏனெனில் மலையும் மலை சார்ந்த இடமும் தான் குறிஞ்சி எனப்படும்.  குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். மக்கள் தோன்றிய இடமும் வாழ்வு தொடங்கிய இடமுமாகக் கருதப் பெறுவதுமான மலையை முருகன் தன் இடமாகக் கொண்டான்.

தமிழுக்கு அமுதென்று பேர் என்றது பாரதிதாசன். அந்த அமுதத்திற்கு உரியவன் முருகன். முருகு என்றால் அழகன் என்று அர்த்தம். தமிழும் முருகனைப் போல அழகானதும் அமிர்தமானதும் அல்லவா! முருகு என்றால் இளமை-அழகு-பெருமை-உயர்வு என்று பொருளாகும்.

அபூர்வ முருகன்

முருகனைத் தமிழ்க் கடவுள் என்றுதான் சைவ சமயத்தவர்கள் கூறுவார்கள்! முத்தமிழ் இருக்கும் இடத்தில் எல்லாம், முருகன் இருப்பான் என்று தமிழ்ப் பக்தி இலக்கியமும் கூறும்! தமிழ் மொழியே முருகன்தான் என்றும், அதனால்தான் தமிழுக்குக் கண் போன்ற உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு என்பதுபோல், முருகனுக்கும் பன்னிரண்டு கண்கள் என்றும் ஒப்பிடுவதுண்டு. தமிழ் எழுத்துக்களை மூன்று இனமாக, மு-மெல்லினம், ரு-இடையினம், கு- வல்லினம் என்று பிரித்து, அவற்றில் ஒவ்வோர் எழுத்தாகத் தெரிந்து எடுத்து அழைத்தார்கள்!

பண்டை மாந்தரில், குறிஞ்சி நில மக்கள், தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன் (சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கினார்கள். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்காகும்.

அவர்கள் வேட்டையாடுவதில் சிறந்திருந்ததனால், தமது தெய்வத்தையும் மறவனாகக் கருதி அதற்கேற்றவாறு அவனை முருகன் அதாவது இளைஞன் என்றார்கள். குமரன் என்ற பெயரும் இளைஞன் என்ற பொருளைக் கொண்டதாகும்.

குறிஞ்சி நிலத்தின் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும் வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும் முருகனுக்குப் பெயர்கள் தோன்றின.

முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில்; நிறுத்தியதால் அவனுக்குக் கந்தன்| என்ற பெயரும் தோன்றியது. கந்து என்றால் தூண். கந்தம் என்றால் பெருந்தூண் என்று பொருள்.

கந்தன் கதை

“கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில்” என்ற புறநானூற்றின் 52 ஆவது பாடல் மூலம் ஓர் உதாரணத்தை, கந்தம் என்ற சொல்லிற்குக் காட்டலாம்.

குறிஞ்சி நிலப் பறவையாகிய மயிலை முருகன் ஊர்தியாகக் கொண்டமையால் மயிலூர்தி| மயிலேறும் பெருமாள் என்னும் இலக்கிய வழக்கும் எழுந்தன.

குறிஞ்சி நிலத் தலைவி கொடிச்சி எனப்பட்டதால் கொடி என்று பொருள்படும் வள்ளி, முருகனின் தேவியாக வழிபடப்பட்டாள். வள்ளி பற்றிய குறிப்புக்களைச் சங்க இலக்கியத்தில் நிறையக் காணக்கூடியதாக உள்ளது. வள்ளியைப் பற்றிய முதல் குறிப்பு, தொல்காப்பியப் புறத்திணை இயலில் கிடைத்துள்ளது. கொடிநிலை- கந்தழி- வள்ளி என்ற வடு நீங்கு சிறப்பின் என்ற நூற்பா முருக வழிபாட்டையும், வள்ளியையும் சுட்டி நிற்கின்றது.

“முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல்” என்று நற்றிணையின் 83 ஆவது பாடலடி குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இந்தப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றிருந்தாலும், இது குறிப்பிடுகின்ற வள்ளி-முருகன் செய்தி காலத்தால் பழமையானதாகும்.

சிலப்பதிகாரக் குன்றக்குரவையும் வள்ளி பற்றிய வழிபாட்டு நிலையை விவரித்துள்ளது.

வள்ளி

முருக வழிபாட்டின் தொன்மையை முருகன் வள்ளி இணைப்புக் குறித்தும் அறியலாம். முருகன் புதிய கற்கால வேட்டைத் தெய்வம், அதாவது வேட்டையாடி உணவைத் தேடும் நாகரிகத்தைக் குறித்த தெய்வம் என்றும், வள்ளி உணவைச் சேகரித்து உண்ணும் நாகரிகத்தினைக் குறித்த தெய்வம் என்றும் ஆய்வாளர் பி.எல்.சாமி குறிப்பிடுவார். அதாவது, முருகனும் வள்ளியும் இணைந்தது, வேட்டை நாகரிகமும், உணவு சேகரிப்பு நாகரிகமும் கலந்த ஒன்றாகும்.

உணவு சேகரிப்பு நாகரிகக் காலத்தில், தானே விளைந்த வள்ளிக் கிழங்கு முதலியற்றை மனிதன் உண்டு வாழ்ந்தான். இவ்வாறு கிடைத்த வள்ளிக்கிழங்கையே ஆதி மனிதன் செழிப்பிற்கும், உற்பத்திக்கும் அறிகுறியாகக் கொண்டான். இதுவே பின்னர் செழிப்புத் தெய்வமாகவும், வள்ளியாகவும் உருப்பெற்றது.

ஆனால் முருகனோ சீற்றத்திற்குரிய கடவுள். இதனால்தான் இவனைச் சாந்தப்படுத்த முன்னாளில் பலி முதலியன ஏற்பட்டன.

“முருகன் சீற்றத்து உழுகெழு குரிசில்” என்ற புறநானூறும்,

“சினமிகு முருகன்” என்று அகநானூறும்,

“முருகு உறழ் முன்பொடு

கடுஞ்சினம்” என்று நற்றிணையும் பாடுகின்றன.

ஆனால் முருகனின் பரிணாம வளர்ச்சியில் பின்னாளில் காதல் தெய்வமாகவும் வணங்கப்பட்டுள்ளான். காதலரை ஒன்று சேர்க்கும் கடவுளர்களாக, முருகன் வள்ளி விளங்கி உள்ளார்கள் என்பதற்கு சிலப்பதிகாரமும் பரிபாடலும் சான்றுகள் ஆகும். வள்ளி திருமணம் முருகனின் காதலுக்கு மிகப் பெரிய உதாரணம்.

பண்டைத் தமிழகம் தாய்வழிச் சமூக அமைப்பைக் கொண்டது. பண்டைத் தமிழகத்துச் சமூக நிகழ்வுகளில் வீரமும் காதலும் பெரிதாக இடம் பெற்றிருந்தன. புறம் அறம் என்று சங்க இலக்கியங்களில் வீரமும் காதலும் முக்கியமானது.

வீரத்துக்குத் தாய் வழிச் சமூக அமைப்பில் தெய்வமாக விளங்கியவள் கொற்றவை ஆவாள். ஆண் வழித் தலைமையில் போர்த் தெய்வமாக முருகன் உருவெடுத்தபோது, கொற்றவை முருகனின் தாயாக ஆக்கப் பெற்றாள்.

இவ்வாறே, காதல் வள்ளி முருகனின் மனைவியாக ஆக்கப் பெற்றாள். வள்ளி-முருகன் இணைப்பு எளிதாக நிகழ்ந்துவிட்ட ஒன்று அல்ல என்று தொல் தமிழர் சமய ஆய்வு நூல் குறிப்பிடுகின்றது.

முருகன் புராணங்களின் படி அசுரர்களை அழித்தவன். ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை அடைத்து தானே படைக்கும் தொழிலையும் காக்கும் தொழிலையும் செய்தவன். எனவே இவனே மும்மூர்த்திகளாக நின்ற தருணமும் உண்டு.

பிரம்மனை விடுவிக்க வேண்டிய தந்தைக்கும் பிரணவத்தின் பொருள் தெரியாததால் அவரையே சீடனாக கொண்டு பொருள் ஓதியவன். எனவே தான் அவனுடைய இருப்பிடத்தை படை வீடுகள் என்கின்றோம். அதாவது போர் கலன்கள் வில் அம்பு போன்ற உருவத்துடன் அவன் வழிப்படப்படுகிறான். முருகன் வேலை போர்க்கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டான்.

மயிலம் முருகன் கோவில்

நான் பயணப்பட்ட சில முருகன் கோயில்கள்;

எல்லோரும் அறிந்திருக்கும் முருகனின் அறுபடை வீட்டை எழுதாமல் நான் கண்ட சில பழமையான கோயில்களை உங்களுக்கு விவரிக்கிறேன்.

மாமல்லபுர சங்ககால முருகன் கோவில் என்பது மாமல்லபுர கடற்கரையில் சில ஆய்வாளர்களால் சாளுவன்குப்பம் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்றளியாகும்.

2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் எழுந்த ஆழிப் பேரலைகள் குறைந்த பின்னர் தொல்லியல் ஆய்வாளர்கள் சுனாமி அலைகளால் வெளிப்பட்ட பாறைகளில் கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தனர்.

இந்த கிராமத்தின் அப்போதைய பெயர் திருவிழிச்சில். புலிக்குகையிலிருந்து நூறு மீட்டர் தள்ளி இந்த முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது.

பெரும்பாலான இந்துக் கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. எனவே தான் இது சங்க காலத்திற்கு முற்பட்டது என்று கணக்கிடப்பட்டது. இக்கோவில்தான் முருகக் கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது.[3] தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவ காலத்துக்கு முந்தைய கோவில்கள் இரண்டில் இக்கோவில் ஒன்று. மற்றொன்று வேப்பத்தூரில் அமைந்துள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலாகும்.[2]

ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன், சோழ மன்னர்கள் முதலாம் பராந்தகன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் ஆகியோரால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுகள் திருவீழ்ச்சில் (தற்போதைய சாளுவன்குப்பம்) என்ற இடத்தில் அமைந்த முருகன் கோவிலைப் பற்றிக் குறிப்பிட்டன.[6]

செங்கல் கட்டுமானத்தில் ஆன ஒரு கோயிலின் அடி பாகம் கண்டு பிடிக்கப்படவே அது சுனாமியால் அழிந்துப்பட்ட ஒரு முருகன் கோயில் என்று கண்டு அதன் மேல் மீண்டும் அதே கோயிலை கருங்கல் கட்டிடத்தால் கட்டியுள்ளனர்

பல்லவர்கள். இன்று அதுவும் சுனாமியால் அழிந்து போய் விட்டது. ஆனால் அந்த சிதையுண்டு வெறும் அஸ்திவாரம் மட்டும் காணக்கிடைக்கும் அந்த இடத்தில் முருகன் கோயில் இருந்ததற்கு அடையாளமாக ஒஎறு பெரிய கல்லால் ஆன வேல் ஒன்றிருக்கிறது. 2018, மே 3 அன்று இரவு, சில சமூக விரோதிகள், இத்தளத்திலுள்ள கல்வேல் தனை பெயர்த்து இரண்டாக உடைத்துச் சிதைத்துள்ளனர்.

உலகின் முதலும் மூத்ததுமான மொழி தமிழ் என்பதற்கு எத்தனை அடையாளங்கள் இருந்தாலும் அந்த தமிழுக்கு கடவுள் முருகன் தான் என்பதற்கு இதைப் போன்ற பழமையான கோயில்கள் தான் சாட்சியாக காலம் கடந்தும் நிற்கிறது.

எட்டுக்குடி

சூரபத்மனை அழிக்க எடுத்த அவதாரம் தான் முருகன் என்று புராணங்கள் சொல்கிறது. அந்த யுத்தத்திற்கு முருகன் இந்த தளத்திலிருந்து தான் கிளம்பி சென்றதாக ஐதீகம்.

நாகை மாவட்டத்தில் உள்ள அருமையான கந்த க்ஷேத்திரங்களில் எட்டுக்குடி திருத்தலமும் ஒன்று. சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்த தலம் இது. வன்னி மரத்தை தல விருட்சமாகவும் சரவணப் பொய்கையை தீர்த்தமாகவும் கொண்ட ஆலயம் எனும் சிறப்பிற்குரியது. பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி ஸ்ரீசுப்ரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிகராகவும் காட்சி தருவார்.

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்

பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இங்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சௌந்தரியம் உடையவனாக திகழ்கிறார். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கிச் சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

நாகப்பட்டினம் அருகில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். “சரவணபவ’ என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதியபடியே வேலை செய்யும் வழக்கம் உண்டு அவனுக்கு! அளப்பரிய முருக பக்தி கொண்டவன் அவன்!

அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையைச் செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னன், அந்தச் சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் கட்டைவிரலை வெட்டி விட்டான். அவன் வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சியும் பயிற்சியும் எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அந்த ஊரை ஆட்சி செய்த குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான்.

எட்டுக்குடி முருகன்

அந்தச் சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்த நேரத்தில் வர அதை “எட்டிப்பிடி’ என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலைப் பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் எட்டிக்குடி என மாறி,

தற்போது எட்டுக்குடி ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது.

இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தான். அதை எண்கண் என்ற தலத்தில் வைத்தான். சிற்பி முதலில் வடித்த சிலை சிக்கலிலும், அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

கோயிலின் உள்ளே வால்மீகியார் என்னும் சித்தருக்கு பீடம் உள்ளது. ராமாயணம் எழுதிய வால்மீகி தான் இந்த இடத்தில் சித்தராக அமைந்து விட்டார் என்பதும் ஒரு ஐதீகம்.

சிக்கல்

‘‘முருகனை தொழப்போய் மூவரையும் வணங்கினேன்’’ என்பார்கள். ஆனால், இங்கோ மிக அரிதாக சிவன், சக்தி, நாராயணன், அனுமார், கணபதி என்று ஐந்து கடவுள்கள் புடைசூழ அருள் பாலிக்கிறார் முருகன். சிக்கல் கிராமத்தில் வீற்றிருக்கும் இந்த சிறப்பு மிக்க சிங்காரவேலர், பக்தர்களின் சிக்கல்களைத் தீர்க்கும் சிங்கார வேலராக விளங்குகிறார்.

நாகை மாவட்டம், நாகை – திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் கிராமம். இங்கு 80 அடி உயரத்தில் அமைந்துள்ள கோயிலில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் சிங்காரவேலர்.

சோழ வள நாட்டில் இயற்கையில் மலைகள் கிடையாது. செயற்கையாக அமைக்கப்பட்ட மலைக் கோயிலான இந்தத் தலம், அறுபடை வீடுகளுக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.

சிக்கல் சிங்கார வேலவர்

வலப்புறம் சிவனாகிய ‘நவநீதேஸ்வரர்’, இடப்புறம் பார்வதிதேவியான ‘வேல் நெடுங்கண்ணி’.. இப்படி அம்மை – அப்பனுக்கு இடையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிங்காரவேலரின் பார்வை பட்டாலே மலையளவு சிக்கல்களும் பனி போல மாயமாகி விடுமாம்.

‘‘ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், மக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகனால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள் முருகனிடம் மன்றாட, முருகனும் சூரனை வதம் செய்ய சம்மதித்தார்.

சூரன் சிவனிடம் அழியா வரம் பெற்றதால், அவனை அழிப்பதற்கான வேல் வேண்டி இந்தத் தலத்தில் அம்மை – அப்பன் முன் தவமிருந்தார் முருகன். இறுதியில் மகனின் தவத்தை மெச்சிய பார்வதிதேவி, சக்தி மிக்க வேலை வழங்க, அந்த வேலுடன் திருச் செந்தூர் சென்று சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அன்று முதல் சிங்காரவேலன் ஆனார் முருகன்.

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, ‘சக்தி – வேலன் புறப்பாடு’களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும். அப்படி வழியும் வியர்வையை அர்ச்சகர்கள் துடைப்ப தும், துடைக்கத் துடைக்க வியர்வை துளிர்ப்பதும் மிகவும் ஆச்சர்யமானது.

எண்கண் 

தல வரலாறு படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தினை மறந்துவிட்டார். அந்த சமயத்தில் முருகன் பிரம்மனிடம், பிரணவ மந்திரத்திற்கு அர்த்தத்தை கேட்க பிரம்மன் சிக்கலில் சிக்கிக் கொண்டார். இந்த மந்திரத்தின் அர்த்தம் மறந்ததன் காரணமாக முருகனின் கோபத்திற்கு ஆளாகி விட்டார் பிரம்மன். பிரணவ மந்திரத்தின் அர்த்தம் மறந்ததற்கு தண்டனையாக பிரம்மன், முருகனால் சிறையில் அடைக்கப்பட்டார்.

கல்வி வரம் அருளும் எண்கண் முருகன்

பிரம்மனின் படைக்கும் தொழிலை முருகனே செய்து வந்தார்.  பிரம்மன் தனது படைக்கும் தொழிலை முருகனிடமிருந்து திரும்ப பெற்றுத்தருமாறு, சிவபெருமானிடம் வேண்டுதல் வைத்து, பூஜித்து வந்தார். பிரம்மனின் வேண்டுதலுக்கு இணங்கி  சிவபெருமான், பிரம்மன் முன்னே தோன்றினார். முருகனை அழைத்த சிவபெருமான் படைக்கும் தொழிலை பிரம்மனிடமே தருமாறு கூறினார். ஆனால் முருகனோ, ‘பிரணவ மந்திரத்தின் சிறப்பினை அறியாத பிரம்மனிடம் படைத்தல் தொழிலை கொடுப்பது சரியல்ல’ என்று மறுத்துவிட்டார். சிவபெருமானுக்கு, முருகன் பிரணவ மந்திரதை உபதேசித்தது போல், பிரம்மனுக்கும் முருகனே பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை உபதேசிக்க வேண்டும் என்று சிவபெருமான் முருகனிடம்  கூறினார். சிவபெருமான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முருகன் பிரணவ மந்திரத்தின் மகிமையையும், அர்த்தத்தினையும் பிரம்மனிடம் உபதேசம் செய்தார். பின்பு படைக்கும் தொழிலானது பிரம்மனிடம் அளிக்கப்பட்டது‌. 

பிரம்மா தனது எட்டுக் கண்களால் சிவனைப் பூஜித்ததால் இந்த தலத்திற்கு பிரம்மபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. முருகனால் இந்த உபதேசம் பிரம்மனுக்கு உபதேசிக்கப்பட்டு இத்தலத்தில் முருகன் உற்சவராக காட்சியளிக்கின்றார்.

எட்டுக்குடி எண்கண் சிக்கல் மூன்று தளங்களிலும் ஒரே போன்று முருகன் சிலை இருக்கும்.

நன்றி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; தரிசனம் கிடையாது''

"திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் திருப்பரங்குன்றத்திற்கு புறப்படுவதால் ஜூலை 14 ஆம் தேதி மீனாட்சியம... மேலும் பார்க்க

திருச்செந்தூர் குடமுழுக்கு: கடற்கரை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்; தற்போதைய நிலவரம் என்ன?

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெற... மேலும் பார்க்க

`வேதபாராயணம், திருமுறை.. தமிழில் திருச்செந்தூர் குடமுழுக்கு' - திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

தமிழ்கடவுள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது.... மேலும் பார்க்க

சபரிமலை ஐயப்பன் கோயில்: ஆனி மாத பூஜை, கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்! | Photo Album

சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன் கோயில், ஆனி மாத பூஜை.சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க