ஜம்மு - காஷ்மீர் ஆக்கிரமிப்பை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும்: இந்தியா
ஜம்மு - காஷ்மீரில் சில பகுதிகளை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவற்றை உடனடியாக காலி செய்ய வேண்டும் என ஐ.நா. கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமைதி நடவடிக்கைகள் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை சாடினார்.
அங்கு பேசிய ஹரீஷ் “ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. இனி எப்போதும் அப்படியே இருக்கும். பாகிஸ்தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றது. அவர்கள் அதை காலி செய்ய வேண்டும்” என்றார்.
ஐ.நா. விவாதத்தின்போது ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பிய நிலையில் இந்தியா சார்பில் கடுமையாக பதிலளிக்கப்பட்டது.
இதையும் படிக்க | தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி; மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500
மேலும், “பாகிஸ்தான் பிரதிநிதி இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீர் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்ததை இந்தியா கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதுபோன்று தொடர்ச்சியாக தெரிவிக்கப்படும் கருத்துகளால் அவர்கள் செய்யும் சட்டவிரோத உரிமை மீறல்களையோ, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையோ நியாயப்படுத்த முடியாது.
தங்களது பிளவுவாத கருத்துக்களின் மூலம் இந்த மன்றத்தின் கவனத்தை திசை திருப்ப வேண்டாமென்று பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்” என்று ஹரீஷ் தெரிவித்தார்.
இந்தியா அரசியலமைப்பின் 370-வது பிரிவான ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்தது. இதன்மூலம் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது.