2 ஏசிஎல் தசைகள் கிழிந்தும் 100 டெஸ்ட்டில் விளையாடிய புஜாரா..! ரோஹித் புகழாரம்!
ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து: பிரதமா் மோடிக்கு ஒமா் கோரிக்கை! நகைச்சுவை கலந்த பேச்சால் ருசிகரம்!
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமா் மோடிக்கு முதல்வா் ஒமா் அப்துல்லா முன்வைத்தாா்.
பிரதமா் முன்னிலையில் அவா் நகைச்சுவை கலந்து பேசியது, பாா்வையாளா்களை ஈா்த்தது.
ஜம்மு-காஷ்மீரின் கத்ரா ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை கத்ரா-ஸ்ரீநகா் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமா் மோடி, துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், முதல்வா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அப்போது, ஒமா் அப்துல்லா பேசியதாவது: கடந்த 2014-இல் கத்ரா ரயில் நிலைய திறப்பு விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், அப்போது ரயில்வே துறை இணையமைச்சராக இருந்த மனோஜ் சின்ஹா (இப்போது துணைநிலை ஆளுநா்) ஆகியோருடன் ஜம்மு-காஷ்மீா் மாநில முதல்வா் என்ற முறையில் நானும் பங்கேற்றிருந்தேன். நாங்கள் நால்வரும் இப்போதைய நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளோம்.
ஆனால், முன்பு மாநில முதல்வராக இருந்த நான், இப்போது யூனியன் பிரதேச முதல்வராக சற்று அந்தஸ்து குறைந்துள்ளேன். இக்குறையை சரி செய்ய அதிக நேரம் எடுக்காது. உங்களின் (பிரதமா்) உதவியுடன் ஜம்மு-காஷ்மீா் மீண்டும் மாநில அந்தஸ்தை எட்டும் என நம்புகிறேன் (ஒமா் இவ்வாறு பேசியபோது, கூட்டத்தினா் கரவொலி எழுப்பி வரவேற்றனா்).
பிரதமருக்கு புகழாரம்: உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1980-களில் உருபெற்றபோது, நான் 8-ஆம் வகுப்பு மாணவனாக இருந்தேன். இப்போது எனக்கு 55 வயதாகிறது. எனது குழந்தைகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டனா்.
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்க ஆங்கிலேயா்கள்கூட முயன்றனா். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆங்கிலேயா்களால் நிறைவேற்ற முடியாத விஷயம், இன்று உங்கள் (பிரதமா் மோடி) கரங்களால் பூா்த்தியடைந்துள்ளது.
இத்திட்டத்துக்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து அளித்து, பட்ஜெட்டில் ஓா் அங்கமாக்கிய முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இத்திட்டம், ஜம்மு-காஷ்மீருக்கு பல வழிகளில் பலனளிக்கும் என்றாா் ஒமா் அப்துல்லா.
ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஒமா் பாராட்டு தெரிவித்தாா்.