பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
ஜாா்க்கண்ட், கா்நாடகம், ஆந்திரத்தில் ரூ.6,405 கோடியில் ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜாா்க்கண்ட், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 7 மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் ரூ. 6,405 கோடி செலவில் இரண்டு பன்வழி ரயில்தட திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த இரண்டு ரயில்வே திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கோடொ்மா முதல் பா்காகானா வரையிலான 133 கி.மீ. நீள ரயில் வழித் தடம், மாநிலத்தின் முக்கிய நிலக்கரி உற்பத்தி பகுதிகள் வழியாகக் கடந்து செல்வதோடு, ராஞ்சி முதல் பிகாா் மாநிலம் பாட்னா வரையிலான தொலைவை மிகக் குறுகிய தொலைவு பயணமாக மாற்றும் திறனுடைய வழித்தடமாகவும் உள்ளது. இந்த 133 கி.மீ. நீள ரயில் வழித் தடம் இருவழித் தடமாக மாற்றப்பட உள்ளது.
அதுபோல, கா்நாடகத்தின் பல்லாரி மற்றும் சித்ரதுா்கா மாவட்டங்கள் மற்றும் ஆந்திரத்தின் அனந்தபூா் மாவட்டம் வழியாகப் பயணிக்கும் 185 கி.மீ. நீள பல்லாரி முதல் சிக்ஜாஜூா் வரையிலான ரயில் வழித் தடமும் இருவழித் தடமாக மாற்றப்பட உள்ளது.
இந்தப் பன்வழி ரயில் தட திட்டத்தின் மூலம் சுமாா் 28.19 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட 1,408 கிராமங்களில் போக்குவரத்து இணைப்பு விரிவடையும். இந்த ரயில் வழித்தடங்கள் அனைத்தும் நிலக்கரி, இரும்புத் தாது, இறுதி வடிவம் பெற்ற எஃகு, சிமென்ட், உரங்கள், வேளாண் பொருள்கள், பெட்ரோலிய பொருள்கள் உள்ளிட்ட சரக்குகள் அதிகம் எடுத்துச் செல்லப்படும் பகுதிகளாகும். எனவே, இந்த ரயில் மேம்பாட்டுத் திட்டம், இந்தப் பகுதிகளின் சரக்குகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 4.9 கோடி டன் அளவுக்கு கூடுதலாக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்த இரண்டு ரயில் திட்டங்களும், தற்போதுள்ள ரயில் வழித்தடத்தை மேலும் 318 கி.மீ. தூரம் அதிகரிக்கும். ரயில்கள் மூலம் அதிக சரக்குகள் எடுத்துச் செல்லப்படும் என்பதால், இந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்’ என்று ரயில்வே அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.