மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர்; கால்வாயிலிருந்து சடலம...
ஜி.டி.நாயுடு: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் பெயர் சர்ச்சை - அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் கெட்டிக்காரர் என முதலமைச்சர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைத்தவர்களையும், தொண்டர்களையும் மதிக்கக் கூடியவர்.

ஆனால், எடப்பாடியார் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர். முதல்வரைக் குறை கூறுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம், கோவையில் பெரியார், சேலத்தில் பாரதிதாசன், கடலூரில் அஞ்சலையம்மாள், திருச்சியில் காமராசர், நெல்லையில் காயிதே மில்லத் என அனைத்து தலைவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.
எம்ஜிஆர் பெயரில் என்ன செய்து இருக்கின்றீர்கள். அவரது பெயரைச் சொல்ல பயப்படுபவர்கள் எதிர்க்கட்சியினர். ஸ்டாம்ப் சைஸில் கூட எம்ஜிஆர் படத்தைப் போடாதவர்கள். அதிமுக ஆட்சியில் 71 ரயில்வே பாலங்கள் அறிவிக்கப்பட்டன.

அதில் நாங்கள் 36 பாலங்களை நிலம் எடுத்து கட்டி முடித்துள்ளோம். 20 பாலங்களுக்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. செம்மொழி பூங்காவை கலைஞர் அறிவித்தபோது, அதைச் செயல்படுத்தாதவர்கள் அதிமுகவினர். பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததற்கு நடுநிலை மக்கள் பாராட்டுகின்றனர்.
இது அதிமுக அறிவித்தத் திட்டமாக இருந்தாலும், 5 சதவிகிதப் பணிகளை மட்டுமே அதிமுக முடித்துவிட்டு சென்றது. திமுக ஆட்சியில் தான் மீதியுள்ள 95 சதவிகித பணிகளை முடித்து பாலத்தை திறந்துள்ளோம். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது அதிமுக தான். பொதுவாக ஜி.டி.நாயுடு என்றே அவரை அழைப்பார்கள்.

அதன் காரணமாக தான் அந்த பெயர் வைக்கப்பட்டது. சாதிய அடையாளம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஜி.டி.நாயுடு குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.” என்றார்.