பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்
பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டு வந்தார். ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது பிரசாந்த் கிஷோர் திடீரென தனது கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறார். முதல் கட்டமாக 51 பேர் கொண்ட பட்டியலை அறிவித்திருக்கும் பிரசாந்த் கிஷோர் தனது பெயரை பட்டியலில் அறிவிக்கவில்லை. 51 பேர் பட்டியலில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என படித்தவர்களை களத்தில் இறக்கி இருக்கிறார்.
பாட்னா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய கே.சி.சின்ஹா, பாட்னா உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒய்.பி.கிரி, முஜாபர்பூரில் டாக்டராக பணியாற்றும் டாக்டர் அமித் குமார் போன்றோரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர். இப்பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறாவிட்டாலும் அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் தொகுதியான ரகோஜ்பூர் அல்லது பிரசாந்த் கிஷோரின் சொந்த ஊரான கார்ஹாகர் ஆகிய இரண்டில் ஒன்றில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கார்ஹாகர் தொகுதியில் ரிதேஷ் ரஞ்சன் போட்டியிடுவார் என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருக்கிறார். இதனால் ரகோஜ்பூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை
ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பாக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் தேஜஸ்வி யாதவ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில்,''நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். 20 மாதத்தில் அரசு ஊழியர் இல்லாத வீடே இருக்காது.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து அதுவாகத்தான் இருக்கும். எங்களால் இதை செய்ய முடியும் என்பதால்தான் இதை சொல்கிறோம். இது முதல் அறிவிப்புதான். மேலும் திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும். 20 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் 20 மாதத்தில் வேலை கொடுப்போம்''என்று தெரிவித்தார்