சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக ஹைதராபாதில் மாற்று வீரர் சேர்ப்பு!
ஜோஷ் இங்லிஷை 3-வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு? ரகசியம் பகிர்ந்த ரிக்கி பாண்டிங்!
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் 3-வது வீரராக ஜோஷ் இங்லிஷ் களமிறக்கப்பட்டது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
இதையும் படிக்க: கிளன் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக பஞ்சாப் கிங்ஸில் ஆஸி. ஆல்ரவுண்டர் சேர்ப்பு!
நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் முதல் ஓவரிலேயே பிரியன்ஷ் ஆர்யாவின் விக்கெட்டினை இழந்தது. இதனையடுத்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இந்த சீசனில் நடுவரிசை ஆட்டக்காரராக விளையாடி வரும் ஜோஷ் இங்லிஷ் மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 14 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
ரகசியம் பகிர்ந்த ரிக்கி பாண்டிங்
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ஜோஷ் இங்லிஷ் 3-வது வீரராக களமிறக்கப்பட்டது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் முடிவு என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜோஷ் இங்லிஷை மூன்றாவது வீரராக களமிறக்கும் முடிவு அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருடையது. இது போன்ற ஆடுகளத்தில் நாம் சீக்கிரம் விக்கெட்டினை இழந்தால், மூன்றாவது வீரராக ஜோஷ் இங்லிஷை களமிறக்கலாம் என ஷ்ரேயாஸ் கூறினார். மயங்க் யாதவ் ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்துவீசுவார் என உணர்ந்தோம். மயங்க் யாதவின் பந்துவீச்சில் ஜோஷ் இங்லிஷ் சிறப்பாக விளையாடி சிக்ஸர்களை விளாசினார். அவருடைய இன்னிங்ஸ் அடுத்து களமிறங்கியவர்களுக்கு பேட்டிங் செய்வதை எளிமையாக்கியது என்றார்.
இதையும் படிக்க: கலீல் அகமது ஓவரில் 33 ரன்கள் அடித்தது எப்படி? ரோமாரியோ ஷெப்பர்டு பதில்!
ஜோஷ் இங்லிஷ் அடித்த 4 சிக்ஸர்களில் 3 சிக்ஸர்கள் மயங்க் யாதவ் ஓவரில் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.