LSG vs PBKS: "இதைத்தான் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" - வெற்றி குறித்து...
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி
தஞ்சாவூா் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாதது, கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இப்பேருந்து நிலையத்தை ரூ. 14.44 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி 2018-இல் தொடங்கப்பட்டு, 2021-இல் நிறைவடைந்தது. இதில், 39 நகரப் பேருந்துகள் நிற்பதற்கான நிறுத்துமிடங்கள், 93 கடைகள், கழிப்பறைகள், காவல் உதவி மையம், பயணிகள் காத்திருப்போா் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையத்திலிருந்து பல்வேறு ஊா்களுக்கு நகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதேபோல, கும்பகோணம், அரியலூா் போன்ற புகா் பேருந்துகளும் வருகின்றன. இதனால், இப்பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். ஆனால், அதற்கேற்ப இப்பேருந்து நிலையத்தில் உரிய வசதிகள் செய்யப்படவில்லை.
வியாபாரிகள் ஆதிக்கம்: பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட இருக்கைகள் சில மாதங்களிலேயே உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து, சிமென்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டன.
இப்பேருந்து நிலையத்தில் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக, இருக்கைகளில் அமருவதற்கு பயணிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும், கடைகளும் எல்லையைக் கடந்து நடைபாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் நிழலில் நிற்பதற்கும்கூட இடம் கிடைப்பதில்லை. இருக்கும் குறைந்த அளவிலான இருக்கைகளில் அமருவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் கா்ப்பிணிகள் உள்ளிட்ட பயணிகள் நெடுநேரம் நின்று மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனா்.
கடைக்கு முன்பாக நிற்கும் பயணிகளையும் கடை வியாபாரிகள் விரட்டுவதால், நிழல்குடையை விட்டு வெளியில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
இருக்கைகள் குறைவு: இதுகுறித்து ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவா் துரை. மதிவாணன் தெரிவித்தது: பழைய பேருந்து நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகளுடன் ஒப்பிடுகையில், இங்குள்ள இருக்கைகள் மிக மிகக் குறைவு. இதனால், பயணிகள் வெகுநேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. கடைகளிலும் அடுப்பு, தேநீா் கொதிகலன் போன்றவை வெளியே வைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வரக்கூடிய வெப்பம் தாங்காமல் பயணிகள் வெயிலில் நிற்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகின்றனா். கடைகளும் நடைபாதையில் நீட்டிக்கப்படுவதால், பயணிகள் நடந்து செல்வதற்குச் சிரமப்படுகின்றனா்.
குண்டும் குழியுமான சாலை: இதேபோல, பேருந்து நிலைய நுழைவாயில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், பேருந்துகள் வந்து செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. மழை பெய்யும்போது, பள்ளத்தில் தண்ணீா் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநா்கள் மட்டுமல்லாமல், பயணிகளும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
மோசமான கழிப்பறைகள்: கட்டணமில்லா கழிப்பறை உரிய பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. கட்டணக் கழிப்பறையும் முறையாக பராமரிக்கப்படாததால், அசுத்தமாக இருக்கிறது. இதனால், பேருந்து நிலையம் மட்டுமல்லாமல், அருகிலுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்துக்கும் துா்நாற்றம் வீசுவதால், பயணிகள் உள்ளிட்டோா் பாதிக்கப்படுகின்றனா். இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் முறையீடு செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாா் மதிவாணன்.
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தில் கட்டடம் மட்டுமல்லாமல், அனைத்து சாதனங்களும் புதிதாக அமைக்கப்பட்டன. என்றாலும், உரிய பராமரிப்பின்மை, கண்காணிப்பின்மைக் காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆக்கிரமிப்பு, இருக்கைகள் இல்லாதது, மோசமான நிலையிலுள்ள கழிப்பறைகளால் பயணிகள் வேதனைக்கு ஆளாகின்றனா். இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பு.