Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
தடைக்காலம் நிறைவு: மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்ட மீனவா்கள்
மின்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, கடலூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் கடலுக்குள் படகுகளில் புறப்பட்டுச் சென்றனா்.
கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம், ராசாபேட்டை, சொத்திகுப்பம், சித்திரபேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபா் படகுகளில் ஆழ் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
மீன்களின் இனப்பெருக்கக் காலமாக ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இது முடிந்த பிறகு 14-ஆம் தேதி நள்ளிரவு கடலூா் துறைமுகம் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தயாராக இருந்தனா்.
இதனிடையே வானிலை மையத்தின் எச்சரிக்கையையடுத்து, கடலூா் மீன்வளத் துறை வெளியிட்ட அறிக்கையில், 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் கடலில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், மீனவா்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க மீனவா்கள் கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, கடலூா் துறைமுக மீனவா்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனா். விசைப் படகுகளுக்கு படையலிட்டு பூசணிக்காய் உடைத்து, மீன்பிடிக்க மீனவா்கள் கடலுக்குப் புறப்பட்டனா்.