'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!
தன்னையறிதல் முக்கியம்..! சிஎஸ்கேவில் எவ்வளவு காலம் விளையாடுவேன்? தோனியின் பேட்டி!
உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் தோனியுடன் சஞ்சு சாம்சனும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் தோனி இன்னும் சில ஆண்டுகள் சிஎஸ்கேவில் விளையாடுவதாக விருப்பம் தெரிவித்தார்.
43 வயதாகும் தோனி கடந்த சீசனில் கேப்டன்சியை விட்டுக்கொடுத்தார்.
தற்போது, ருதுராஜ் கேப்டனாக இருக்கிறார். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.
இந்தியாதான் எனக்கு முக்கியம்
நிகழ்ச்சியில் தோனி கூறியதாவது:
சர்வதேச கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டிலிருந்து நான் ஓய்வு பெற்றேன். சிறிது நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. நான் இன்னும் விளையாடும் சில ஆண்டுகளில் மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாட விரும்புகிறேன். பள்ளியில் சிறிய வயதில் எவ்வளவு மகிழ்ச்சியாக விளையாடினேனோ அதேமாதிரி விளையாட விரும்புகிறேன்.
காலனியின் வசிக்கும்போது மாலை 4 மணி விளையாட்டுக்கான நேரம். நாங்கள் பெரும்பாலும் கிரிக்கெட்தான் விளையாடுவோம். காலநிலை சரியில்லையென்றால் கால்பந்து விளையாடுவோம். அதே அளவான அப்பாவித்தனத்துடன் இப்போதும் விளையாட நினைக்கிறேன். ஆனால், செய்வதைவிட சொல்வது எளிதுதான்.
ஒரு கிரிக்கெட்டராக எனக்கு நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடவே விரும்புகிறேன். ஏனெனில், அனைவருக்கும் இந்திய அணியில் விளையாட இடம் கிடைப்பதில்லை. மிகப்பெரிய போட்டிகள் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடும்போது நாட்டிற்காக வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும். எனக்கு எப்போதும் நாடுதான் முதன்மையானதாக இருந்திருக்கிறது.
தன்னையறிதல் முக்கியம்
உங்களுக்கு எது நல்லது என நீங்கள் கண்டறிய வேண்டும். நான் கிரிக்கெட் விளையாடும்போது அதுதான் எனக்கு எல்லாமுமாக இருப்பதாக உணர்கிறேன். வேறெதுவும் முக்கியமாக கருதுவதில்லை.
எந்த நேரத்தில் தூங்க வேண்டும்? எப்போது விழிக்க வேண்டும்? எவையெல்லாம் எனது கிரிக்கெட்டை பாதிக்கும் என்பதுதான் எனக்கு முக்கியமானது.
நண்பர்கள், கேலிப் பேச்சுகள், மற்றவையெல்லாம் பிறகும் நடக்கும். உங்களுக்கு எது சிறந்ததோ அதைக் கண்டறித்து சரியாக செய்தால் எல்லாவற்றுக்கமான சரியான நேரம் உங்களுக்கு கிடைக்கும் என்றார்.