'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!
தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் -சிவசேனை(உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதில் சிவசேனையில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
பின்னர் கடந்த 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை(ஷிண்டே) கூட்டணி ஆட்சியைப் பிடித்து பட்னவீஸ் முதல்வராகவும் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்றனர். தற்போது இருவருக்குள்ளும் கருத்து மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 2022ல் மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்த்த என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி
நாக்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய ஷிண்டே "என்னை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். என்னை சாதாரணமாக நினைத்தவர்களிடம் நான் ஏற்கனவே இதைச் சொல்லிவிட்டேன். நான் ஒரு சாதாரண கட்சி தொண்டர். ஆனால், நான் பால் தாக்கரேவின் தொண்டரும்கூட. எல்லோருக்கும் என்னை பற்றி இந்த புரிதல் இருக்க வேண்டும்.
2022-ல், நான் அரசாங்கத்தையே மாற்றினேன். சட்டப்பேரவையில் எனது முதல் உரையில், தேவேந்திர பட்னவீஸ் 200 இடங்களுக்கு மேல் பெறுவார், எங்களுக்கு 232 இடங்கள் கிடைக்கும் என்று நான் கூறினேன். அதன்படியே நடந்தது. அதனால்தான்சொல்கிறேன் என்னை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த வார்த்தைகள் யாருக்கோ அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்" என்று கூறியுள்ளார்.
ஷிண்டே இவ்வாறு கூறியுள்ளது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.