பனிச் சரிவில் சிக்கிய வீரர் பலி! ஒரே வாரத்தில் 4வது மரணம்!
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் விளையாட்டின் போது பனிச் சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் பலியாகியுள்ளார்.
கொலராடோவின் க்ரெஸ்டடு பட்டே பகுதியைச் சேர்ந்த சாரா ஸ்டெயின்வாண்ட் (வயது 41) என்ற பனிச்சறுக்கு வீரர் ஒருவர் சில்வர்டன் பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் கடந்த பிப்.20 அன்று ஈடுபட்டிருந்தார்.
அப்போது, திடீரென ஏற்பட்ட அவலாஞ்ச் என்றழைக்கப்படும் பனிச்சறுக்கில் சிக்கிய அவர் அதன் இடிபாடுகளினுள் சிக்கிக்கொண்டார். இந்த சம்பவத்தின் போது சாராவுடன் பனிச்சறுக்கில் ஈடுபட்ட மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இதையும் படிக்க: எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
இதனைத் தொடர்ந்து, பனிச்சரிவை கவனித்து கொலராடோ அவலாஞ்ச் இன்பர்மேஷன் சென்டரின் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், பனிச்சரிவின் இடிபாடுகளினுள் சிக்கிய சாராவின் உடலை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த பிப்.17 முதல் அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் பனிப் புயலினால் ஏற்பட்ட பனிச்சரிவினுள் சிக்கி 3 பேர் பலியாகினர். கொலாராடோ மாகாணத்தின் மலைத் தொடர்களில் இந்த வாரத்தின் துவக்கம் முதல் பனிச் சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.