மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!
இலங்கையில் பிரபல கொலைகார கும்பலின் தலைவனை வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மற்றும் கொலைகார கும்பலின் தலைவனாகிய சஞ்சீவா குமரா சமரரத்னே என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த பிப்.19 அன்று அவரது பிணைக் குறித்த விசாரணைக்காக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அந்நாட்டின் சிறப்பு அதிரடிப் படையின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அப்போது, விசாரணைக்காக அவர் நீதிமன்ற கூண்டில் ஏறியபோது வழக்கறிஞர் வேடமிட்டு அங்கு வந்த நபர் ஒருவர் சஞ்சீவாவிவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதையும் படிக்க: ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!
பின்னர், அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய கொலையாளியை தேடி வந்த போலீஸார் அவர் அந்நாட்டை விட்டு கடல் வழியாக தப்பிக்க முயன்றபோது கைது செய்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில் இந்த கொலைக்காக ஒரு புத்தகத்தினுள் துப்பாக்கி வடிவில் பக்கங்களை வெட்டி அதனுள் அவர் பயன்படுத்திய ரிவால்வர் ரக துப்பாக்கியை பதுக்கி பின்புரா தேவாங்கே இஷாரா செவ்வாண்டி (வயது 25) என்ற பெண்ணின் உதவியுடன் நீதிமன்றத்தினுள் அதனை எடுத்து வந்தது காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
துவக்கத்தில், தனது பெயர் முஹம்மது அஸ்மான் ஷெரிஃப்தீன் என்று கூறிய கொலையாளியிடம் போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவரது பெயர் தில்ஷன் பியூமங்கா கண்டனாராச்சி (28) என்பதும், அவர் பல்வேறு அடையாளங்களைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், தலைமறைவான அந்த பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டுள்ள போலீஸார் அவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கு அவர்களுக்கு உதவியதாக ஒரு காவலர் மற்றும் ஒரு வேன் ஓட்டுநர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து கும்பல்களுக்கு இடையிலான பகையினால் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் கொலைகளினால் தற்போது வரையில் 9 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், கும்பல்களின் நடவடிக்கைகளை விரைந்து அடக்குவோம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நீதிமன்றத்தினுள் இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது இலங்கை மக்களிடையே பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.