கபிலேஸ்வரா் கோயில் 3-ஆம் நாள் பிரம்மோற்சவம்: பூத வாகனத்தில் சோமஸ்கந்தமூா்த்தி புறப்பாடு
திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை, ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி சோமாஸ் கந்தமூா்த்தி வடிவில் காமாட்சி தேவியுடன் பூத வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
கோயிலில் இருந்து தொடங்கிய வாகன சேவை, கபிலதீா்த்தம் சாலை, அன்னாராவ் வட்டம், விநாயகா நகா் குடியிருப்பு, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில், என்ஜிஓ காலனி, அலிபிரி பைபாஸ் சாலை வழியாக கோயிலுக்குத் திரும்பியது.
பக்தா்கள் ஒவ்வொரு அடியிலும் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
பின்னா், கோயிலில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் ஸ்ரீ காமாக்ஷி தேவிக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏஇஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.