தமிழ்த்திரை ஜாம்பவான்கள் மூவருக்கும் பொருத்தமாக இருந்த சரோஜா தேவி!
பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரருமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் வாழ்ந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்திரை ஜாம்பவான்கள் மூவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என மூவருக்குமே ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர்.
தன்னுடைய 17 வயதில் 1955ஆம் ஆண்டு, மகாகவி காளிதாசா என்ற கன்னட படத்தில் அறிமுகமாகி, கடைசியாக, நடிகர் சூர்யா - நடிகை நயன்தாரா நடிப்பல் வெளியான ஆதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர், தனக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாயகியாக, ஜெயலலிதாவுக்கு அடுத்து, சரோஜா தேவியைத்தான் நினைத்திருந்தார். அவருடன் சரோஜா தேவி 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து சரோஜா தேவி 22 படங்களில் நடித்துள்ளார். அனைத்துமே சூப்பர் டூப்பர் படங்களாக அமைந்திருந்தன. அதில், தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, பாகப் பிரிவினை, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, ஆலயமணி உள்ளிட்டப் படங்கள், ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவை.
நடிகர் ஜெமினி கணேசனுடன் இணைந்து இவர் 17 படங்களில் நடித்துள்ளார்.