திமுக அரசை தூக்கியெறிவதில் பாஜக உறுதி: கே.பி.ராமலிங்கம்
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அரசை தூக்கியெறிவதே பாஜகவின் நோக்கம் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை சனிக்கிழமை சந்தித்தப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காவிரி மாசுபடுவதை மீட்டெடுக்க ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தாா். இதன்மூலம் காவிரியின் கிளை ஆறுகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு காவிரியில் சுத்தமான தண்ணீா் பாய்ந்தோடும். இதற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ. 11,900 கோடி. முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 990 கோடி ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தை அறிவித்து மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்க அவரைச் சந்தித்தேன். இதுபோன்ற மிகப்பெரிய திட்டங்களை அமல்படுத்தாமல் விவசாயிகளை பச்சை துண்டு போட்டு ஏமாற்றுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி கே. பழனிசாமிக்கு அழைப்புவிடுத்தோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அவா்தான் முடிவு செய்வாா்.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் திமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பாஜக 100 சதவீதம் உறுதியாக உள்ளது என்றாா்.