`KASHMIR சம்பவத்தை மதவாத அரசியலாக்கும் BJP; DMK-வை நம்பி VCK இல்லை’ - Aloor Shan...
`திமுக-வுக்கு இவ்வளவு அடிமையாக திருமாவளவன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை..!’ - தமிழிசை சௌந்தரராஜன்
“ ‘2026 தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என அமித் ஷா சொல்கிறார். மறுபக்கம் எடப்பாடியோ ‘கூட்டணி ஆட்சி இல்லை’ என்கிறாரே?”
``இந்த கூட்டணி அமைத்ததிலிருந்தே, தி.மு.க-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டது. எனவே அவர்கள் எங்களது கூட்டணிக்குள் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்தலாம் எனப் பார்க்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சி வலையில் விழுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. எனவே இதுகுறித்து மேற்கொண்டு பேசமுடியாது. அதேநேரத்தில் விரிவான திட்டமிடலுடன்தான் அமித் ஷா, எடப்பாடி கூட்டணி முடிவை அறிவித்திருப்பார்கள்!”

“அப்படியென்றால், அமித் ஷா கூறியதுபோல ‘கூட்டணி ஆட்சி அமையும்’ என எடுத்துக்கொள்ளலாமா?”
“அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிதான் நிச்சயம் வெற்றி பெறும். அதற்குப் பின்பு என்ன என்பதையெல்லாம் அகில இந்தியத் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். மேற்கொண்டு எந்த கருத்தையும் சொல்ல முடியாது என நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.”

“ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் புதிய மாநில தலைவர் நயினாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார்களே?”
“நயினார் நல்ல அனுபவம் கொண்டவர். அவருடைய காலத்தில் கட்சி மேலும் பலம் பெறும் என நினைக்கிறேன். ஒருவர் தலைவராக வரும்போது பல விமர்சனங்கள் வரும்தான். எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பக்க பலமாக இருக்கிறது. எனவே அனைவரும் இணைந்துதான் பணியாற்றுவோம்.”

“அதேநேரத்தில் கட்சிக்காகக் கடுமையாக உழைத்த உங்களுக்குத் தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்கிற அலங்கார பதவி மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என விமர்சனம் கிளம்பியிருக்கிறதே?”
“முக்கிய தலைவர்கள் அனைவரும் தேசிய பொதுக்குழுவுக்குள் வந்திருக்கிறோம். அது அதிகாரம் படைத்த பதவிதான். நாங்கள்தான் அகில பாரத தலைவர் தேர்தலில் பங்கெடுத்துக்கொள்ள முடியும். நான் எந்த பதவியையும் அதிகார பதவி என எடுத்துக்கொள்வதில்லை. மக்களுக்கு பணியாற்றக்கூடிய பதவியாகவே எடுத்துக்கொள்கிறேன். கவர்னர் பதவியை விடப் பெரிய பதவி ஒன்றும் இல்லை. அதையே விட்டுவிட்டு மக்கள் சேவைக்கு வந்தேன். எனவே நான் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன்.”

“ஆர்.என்.ரவிக்கு எதிரான தீர்ப்பில், ‘ஆளுநர்கள் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள். அரசியல்வாதிகளாகச் செயல்படக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை முன்னாள் ஆளுநராக எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன். அதேநேரத்தில் இதில், எனக்கு வருத்தமும் உள்ளது. இதுகுறித்து கேரளா ஆளுநர், ‘பல லட்சக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படாமல் வழக்காடு மன்றங்களில் இருக்கிறது. இப்படி தாமதமாவதற்கு அவர்கள் காரணம் வைத்திருக்கிறார்கள். அப்படியான காரணங்கள் எங்களுக்கும் இருக்கலாமல்லவா?’ எனக் கேட்டிருக்கிறார். நான்கு தூண்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும். யாருக்கு மேல் யார் என விவாதம் செய்ய வேண்டியதில்லை. இதற்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யத் தயாராகி வருகிறது. எனவே என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.”
.webp)
“ஆளுநர் ரவி, ‘ஜெய் ஸ்ரீ ராம்... ஜெய் ஸ்ரீ ராம்...’ என மாணவர்களைச் சொல்ல வைத்திருப்பது தவறுதானே?”
“அவர் ஒரு இடத்தில் அப்படி கோஷம் போட்டிருக்கிறார். அதைத் தவறு எனச் சொல்லவிட முடியாது. ‘மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது’ என்றெல்லாம் தி.மு.க அமைச்சர் ராசா சொல்கிறார். இது அவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் தானே? இதே தைரியம் ‘ஹிஜாப் அணியக்கூடாது’ எனச் சொல்வதில் இருக்குமா?”

“ ‘ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என்று பிஞ்சுகளின் மனதில் நஞ்சு விதைக்கிறார்கள். இதையெல்லாம் பா.ஜ.க கண்டுகொள்ளாது?’ என திருமா விமர்சித்திருக்கிறாரே?”
“மாணவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது... நெல்லையில். இதற்குத் தமிழக முதல்வரைத்தான் முதலில் அவர் கண்டிக்க வேண்டும். ஆனால், திருமாவோ ‘நாடுமுழுவதும் சாதிய வாதமும், மதவாதமும் வெளிப்படையாகப் பேசப்படுகிறது’ என்கிறார். திருமாவளவன் இவ்வளவு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேங்கைவயல் மக்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. நியாயமாக தி.மு.க கூட்டணியிலேயே வி.சி.க இருக்கக்கூடாது.”

“இதைத்தானே, ‘என்னை துருப்பு சீட்டாக வைத்து தி.மு.க கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது’ என திருமாவளவன் குறிப்பிடுகிறார்?”
“உண்மை நிலையை நாங்கள் சொல்கிறோம். அவரோ கூட்டணியை உடைக்கப் பேசுவதாக எண்ணிக்கொள்கிறார். வேங்கை வயல் விவகாரத்தில், தன் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றுகூட தி.மு.க-விடம் கோரிக்கை வைக்க முடியாத நிலையில் இருக்கிறார் அவர்.”

"இதேபோல், 'கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் போன்று அலங்காரம் அமைத்ததில் எந்த தவறும் இல்லை. பா.ஜ.க தேவையெல்லாம் அரசியல் செய்கிறது' என்கிறாரே அமைச்சர் சேகர் பாபு?"
"சேகர்பாபுவுக்கு எதுவும் தவறாகத் தெரியாது. ஏனெனில் ஸ்டாலினுக்கு ஜால்ரா போட்டே ஆக வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறார். அம்மாவினால் வளர்க்கப்பட்டவர் இந்த அளவுக்கு ஸ்டாலினுக்கு அடிமையாகிக் கிடக்கிறார் என்பதைத் தமிழக அரசியல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் இறந்தவர்களின் வீட்டில் சாமி படங்களை மூடிதான் வைப்பார்கள். ஆனால் கோவிலையே கொண்டுபோய் நினைவிடத்தில் வைப்பது எந்த விதத்தில் நியாயம்?. எப்படியோ 10 மாதங்களில் தி.மு.க-வினர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்"

"ஆனால், 'தி.மு.க கூட்டணி எக்கு கோட்டை. மீண்டும் நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம். பா.ஜ.க பகல் கனவு காண்கிறது" என்கிறார்களே தி.மு.க-வினர்?"
"அது எங்குக் கோட்டை இல்லை. egg (முட்டை) கோட்டை. அதை உடைத்து எறிந்துவிட்டு ஆட்சியைப் பிடிப்போம். அவர்கள் கூட்டணிக்குள் ஆயிரத்தியெட்டு பிரச்னைகள் இருக்கின்றன. கொடிக்கம்பம் நட முடியவில்லை என திருமாவளவன் வெளிப்படையாக பேசுகிறார். துணை முதல்வர் என காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதை கிழிக்கிறார்கள். இதேபோல் ம.தி.மு.க-வுக்குள் நடக்கும் உட்கட்சி பிரச்னையில் வைகோவின் மகன் துரை வைகோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள்.

பிறகு அந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிறார்கள். நியாயமாக பார்த்தால் துரை வைகோ தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த கட்சியில் உண்மையாக உழைத்த பலருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் எங்களை பொறுத்தவரையில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வலுவாக இருக்கிறது. நாங்கள் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட்டினால் 160 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றிபெறக்கூடும். எனவே, அவர்கள்தான் பதற்றத்தில் இருக்கிறார்கள்"

“இதேபோல் ராமதாஸ், அன்புமணி மோதலுக்குப் பின்னால் பா.ஜ.க இருப்பதாகத் தகவல்கள் பேசப்படுகிறதே?”
“எங்கு எது நடந்தாலும் பா.ஜ.க-தான் காரணம் என்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் இன்று சண்டை வருகிறது. நாளைக்கு ஒன்றாக இணைந்துகொள்வார்கள். எங்களைப் பொறுத்தவரைக்கும் பா.ம.க எங்களுடன்தான் இருக்கிறது.”