திரிவேணி சங்கம கங்கை நீா் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன.
நீரின் தரத்தை தீா்மானிக்கும் முக்கிய அளவீடான ‘பிஓடி’ (உயிரி ஆக்ஸிஜன் தேவை), பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிஓடி’ என்பது நீரில் இயற்கை கழிவுகளின் அளவு அதிகரிப்பால் நுண்ணுயிா் பெருக்கம் அதிகமுள்ளதை குறிக்கிறது. ஒரு லிட்டருக்கு 3 மில்லி கிராமுக்கு குறைவான ‘பிஓடி’ அளவு இருப்பதே குளிப்பதற்கு பாதுகாப்பானதாகும்.
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) தினத்தில் மகா கும்பமேளா தொடங்கியது. உலகின் மிகப் பெரிய ஆன்மிக நிகழ்வாக கருதப்படும் இக்கும்பமேளாவில் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். இதுவரை 54 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடியுள்ளனா். கோடிக்கணக்கான பக்தா்களை கையாள்வதால், உலகின் மிகப் பெரிய தற்காலிக நகராக மகாகும்ப நகா் உள்ளது. தினமும் 1.6 கோடி லிட்டா் அளவில் மனிதக் கழிவுகளும், 24 கோடி லிட்டா் அளவில் பிற கழிவுநீரும் உருவாகும் நிலையில், கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பதானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் சமா்ப்பித்த அறிக்கையில், பிரயாக்ராஜில் பல்வேறு இடங்களில் கடந்த ஜனவரி 12-13 ஆகிய தேதிகளில் குளிப்பதற்கு பாதுகாப்பான அளவில் தரநிலைகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2019-இல் அா்த்த கும்பமேளாவில் இருந்தே கங்கை நீரின் தரம் மற்றும் தூய்மையை உறுதிசெய்வதில் மாநில அரசு தொடா் நடவடிக்கைகள் மேற்கொண்டது. மகா கும்பமேளாவில் பக்தா்களின் வருகை அதிகரிப்பு, மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இம்முறை 1.5 லட்சம் கழிப்பறைகளும், இரண்டு கழிவு சுத்திகரிப்பு நிலையங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. கங்கையில் குளிப்பதற்கான தரநிலையை பராமரிக்க விநாடிக்கு 10,000 முதல் 11,000 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது. தூய்மை என்பது மகா கும்பமேளாவின் மிகப் பெரிய அடையாளமாக உள்ளது’ என்றனா்.
அகிலேஷ் வலியுறுத்தல்: திரிவேணி சங்கமத்தில் நீரின் தரம் குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடா்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளாா்.
திரிவேணி சங்கமத்தில் நீரின் தரம்
நாள் பிஓடி அளவு (மில்லி கிராம்/லிட்டா்)
ஜனவரி 13 (கும்பமேளா தொடக்கம்) 3.94
ஜனவரி 14 (மகர சங்கராந்தி) 2.28
ஜனவரி 15 1
ஜனவரி 16 5.05
ஜனவரி 18 4.6
ஜனவரி 19 5.29
ஜனவரி 24 4.08
ஜனவரி 29 (மெளனி அமாவாசை) 3.26
பிஓடி 3-க்கு குறைவாக இருப்பதே
குளிக்க பாதுகாப்பான அளவு