ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப...
திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலையில் விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், விஷேச சாந்தி நடைபெற்று 6 ஆம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 7 ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான திருப்பரங்குன்றத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.2.44 கோடியில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சந்நிதி மற்றும் கணபதி கோயிலில் தலா ஒரு கலசம் என 9 கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து, தர்ப்பைக் கயிறு, பட்டு நூல் கொண்டு (ஸ்பாரிசாகுதி) சுவாமிக்கு சக்தி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவையொட்டி, மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். மாநிலம் முழுவதுமிருந்து பக்தர்கள் குவித்திருப்பதால் கோயில் நகரமாக மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
குடமுழுக்கை முன்னிட்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க 3.45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.